ADDED : ஏப் 10, 2024 02:54 AM
சென்னை : கோடை வெயிலின் தீவிரத்தால், தர்மபுரியில் இருந்து மதுரை மாவட்டம் வரையிலும், பல பகுதிகளில் வெப்ப அலை வீசியது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், தஞ்சாவூர் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக நேற்று வெப்பநிலை பதிவானது.
கடந்த மூன்று நாட்களாக சேலம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களிலும், நேற்று முன்தினம் மதுரை வரையிலும் வெப்ப அலை வீசியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
லோக்சபா தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களும், வெப்ப அலையால் பகலில் பிரசாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
'இன்று மாநிலம் முழுதும் வறண்ட வானிலை நிலவும். நாளை கடலோரம் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 இடங்களில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, திருப்பத்துாரில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தர்மபுரி, மதுரை விமான நிலையம், திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டை, வேலுார், 38; நாமக்கல், கரூர் பரமத்தி, சேலம், 39; ஈரோடு, 40 டிகிரி செல்ஷியஸ் என, மாநிலம் முழுதும், 11 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை நிலவியது.
ஊட்டி, 26; கொடைக்கானல், 22; நாகை, 34; சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், புதுச்சேரி, 35; பாம்பன், கன்னியாகுமரி, 36; கோவை, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

