ADDED : ஜூன் 14, 2024 02:25 AM

சென்னை:சென்னை ஓ.எம்.ஆர்., பாலவாக்கம், சங்கராபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப், 39. இவருக்கு திருமணமாகவில்லை. சொன்னா புரியாது, தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனியாக வசித்து வந்த இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல், தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது; இதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த இரு நாட்களாக, இவரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை.
நேற்று காலை நண்பர்கள் மொபைல் போனில் அழைத்த போது, அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. சந்தேகமடைந்த அவர்கள், அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது, கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது.
திருவான்மியூர் தீயணைப்பு படையினர் கதவை உடைத்து பார்த்த போது, குளியல் அறையில் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
உடலை மீட்ட நீலாங்கரை போலீசார், பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். மாரடைப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

