ADDED : ஏப் 04, 2024 09:04 PM
சென்னை:தமிழக மின் வாரியம், விவசாயிகளிடம் இருந்து, 420 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க அழைப்பு விடுத்ததில், ஏழு பேர், 11 மெகா வாட்டிற்கு தான் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை எனில், வேளாண் சாகுபடி பாதிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர்.
விவசாயிகளுக்கு வேளாண் சாகுபடி மட்டுமின்றி, மின்சார விற்பனை வாயிலாகவும் வருவாய் கிடைக்க, மத்திய அரசு, பி.எம்., - கே.யு.எஸ்.யு.எம்., எனப்படும், பிரதமர் உழவர் சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தை துவக்கியுள்ளது.
இத்திட்டத்தில், விவசாயிகள் தங்களின் நிலத்தில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம். அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம். இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
பிரதமரின் திட்டத்தில் தமிழக விவசாயிகளிடம் இருந்து, 420 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க, இந்தாண்டு பிப்ரவரியில் மின் வாரியம் அழைப்பு விடுத்தது.
ஒரு விவசாயி தனியாகவோ அல்லது, பல விவசாயிகளுடன் கூட்டு சேர்ந்தோ, ஒரு மெகா வாட் முதல், 2 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம்.
ஏற்கனவே, பிரதமரின் திட்டத்தில் இரு விவசாயிகளிடம் இருந்து, 3 மெகா வாட் மின்சாரம் 1 யூனிட், 3.28 ரூபாய்க்கு வாங்க மின் வாரியம் ஆணை வழங்கியுள்ளது.
எனவே, இந்த முறை விவசாயிகள் 1 யூனிட்டிற்கு விருப்பம் தெரிவிக்கும் விலையை பொறுத்து, விலை நிர்ணயம் செய்து, 25 ஆண்டுகளுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், 420 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க அழைப்பு விடுத்ததில், ஏழு பேர், 11 மெகா வாட்டிற்கு தான் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

