சி.பி.ஐ., அதிகாரி போர்வையில் மிரட்டி ரூ.50 லட்சம் பறிப்பு
சி.பி.ஐ., அதிகாரி போர்வையில் மிரட்டி ரூ.50 லட்சம் பறிப்பு
ADDED : மார் 30, 2024 12:59 AM
சென்னை:சென்னை இரும்புலியூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 52. இவரது அலைபேசி எண்ணிற்கு, ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், 'டிராய்' என்ற ஏஜென்சியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
பின், சுரேஷ்குமாரின் மொபைல் போனிலிருந்து, பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்கள் செய்துள்ளதாகவும், இக்குற்றத்திற்காக மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
பண மோசடி வழக்கில் கைதான நபர்களுடன் சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறிய அந்த நபர், 'ஸ்கைப்' என்ற செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றும், விசாரணைக்காக தான் கூறும் வங்கி கணக்கிற்கு, 50 லட்சம் ரூபாயை அனுப்புமாறும் கூறியுள்ளார்.
இதை நம்பி, சுரேஷ்குமார், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 50 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், இதுவரை அந்த பணம் திரும்பி வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மோசடி செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணம், அப்ரிதி, வினிஷ் ஆகியோரின் வங்கி கணக்குகளில் பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி, கேரளாவை சேர்ந்த அப்ரிதி, 25, வினிஷ், 35, முனீர், 34, பாசல் ரஹ்மான், 20 ஆகிய நான்கு பேரை, கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, நான்கு அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சி.பி.ஐ., போலீஸ் போல் ஆள்மாறாட்ட மோசடி, பகுதி நேர வேலை மோசடி, டெலிகிராம் டாஸ்க் கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 'ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சைபர் உதவி எண்- 1930 அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமும் புகார் அளிக்கலாம். சைபர் கிரைம் காவல் நிலையங்களையும் அணுகலாம்' என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

