'கட்சியில் மாற்றங்களை செய்ய வேண்டும்' ஸ்டாலினிடம் துரைமுருகன் எதிர்பார்ப்பு
'கட்சியில் மாற்றங்களை செய்ய வேண்டும்' ஸ்டாலினிடம் துரைமுருகன் எதிர்பார்ப்பு
ADDED : செப் 12, 2024 07:36 PM
வேலுார்:''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டும்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுாரில் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
தி.மு.க., பவள விழாவை முன்னிட்டு ஒவ்வொரு, தி.மு.க.,வினரின் வீட்டிலும் கொடியேற்ற வேண்டும். செப்., 15, 16, 17 தேதிகளில் தி.மு.க.,வின் கறுப்பு, சிவப்பு துண்டு கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சட்டசபை தேர்தல் வர, இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், அமெரிக்காவிலிருந்து, திரும்பிய பிறகு, கட்சியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக முதியவர்கள் வழி விட வேண்டும்.
எதிரிகள் கூட பாராட்டும் அளவுக்கு, இக்கட்சியில் நான் இருந்தததால் தான், இன்றைக்கு அண்ணாதுரை அமர்ந்த இடத்தில் நான் உள்ளேன். அரசியலில் சில சந்தர்ப்ப சூழல்களில் வெறுப்பு வரும், தோல்வி வரும், அவமானம் வரும். நான் படாத அவமானமா, தோல்வியா, சந்திக்காத எதிர்ப்புகளா? இயக்கத்தில் பிடிப்பு வேண்டும். இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் வரும்போதே தடம் பார்த்து அரசியலுக்கு வருகின்றனர். வந்ததுமே, என்ன கிடைக்கும் என ஆலாய் பறக்கின்றனர். அரசியலுக்கு வரும் இளைஞர்கள் கட்சிக்குள் நுழைந்ததுமே பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கக்கூடாது. அரசியல் என்பது பொழுதுபோக்கு மடமோ, வியாபாரமோ அல்ல. அரசியல் என்பது கொள்கை பிடிப்புடம் செயல்பட வேண்டிய ஒரு இடம்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

