'வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்யுங்கள்'
'வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்யுங்கள்'
ADDED : ஏப் 16, 2024 08:35 PM
சென்னை:'பணம் பட்டுவாடா நடப்பதால், அரக்கோணம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
அரக்கோணம் தொகுதியில் தோல்வி பயம் காரணமாக,தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார்.
தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது குறித்து, வீடியோ ஆதாரத்துடன் புகார்கள் அளிக்கப்பட்டும், ராணிப்பேட்டை கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான வளர்மதி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறி,மோசடிக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.
ஓச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில், பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பா.ம.க., அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், நான்கு வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த, 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், உதவி தேர்தல் அதிகாரி ஒருவர் தலையிட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், வாகனத்தையும் விடுவித்திருக்கிறார். அந்த வாகனங்களுக்கு மாற்றாக வேறு ஒரு வாகனத்தை சோதனையிட்டதாகவும், அதில் பணம் இல்லை என்றும் போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். இது, அப்பட்டமான தேர்தல் விதிமீறல்.
நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால், மாவட்ட தேர்தல் அதிகாரியே தி.மு.க.,வினரின் தேர்தல் விதிமீறல்களுக்கு துணை போனால், தேர்தலை எவ்வாறு நியாயமாக நடத்த முடியும்? இது ஜனநாயகப் படுகொலைக்கு தான் வழி வகுக்கும்.
வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கும் அரக்கோணம் தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
கலெக்டர் வளர்மதியை தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

