கோடநாடு வழக்கில் நழுவியது பிடி; கோபத்தின் உச்சியில் முதல்வர் சஜீவனை துபாய் தப்ப விட்ட அதிகாரி யார் என விசாரணை
கோடநாடு வழக்கில் நழுவியது பிடி; கோபத்தின் உச்சியில் முதல்வர் சஜீவனை துபாய் தப்ப விட்ட அதிகாரி யார் என விசாரணை
ADDED : மே 14, 2024 07:18 PM
வன விலங்குகள் வேட்டையாடப்பட்ட வழக்கில், அ.தி.மு.க., நிர்வாகி சஜீவன் கைதாகாமல் தப்ப விட்ட அதிகாரிகள் யார் என்ற விசாரணை தீவிரமாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், அவர் இறந்த பின், 2017 ஏப்., 24ல் கொள்ளை நடந்தது. அதை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, விபத்து மற்றும் தற்கொலையில் நான்கு பேர் இறந்தனர். இந்த மர்ம மரணங்கள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றவே கொள்ளை நடந்ததாகவும், அதன் பின்னணியில் அ.தி.மு.க., அதிமுக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கேற்ப, அ.தி.மு.க., ஆட்சியில் கோடநாடு சம்பவம், சாதாரண கொலை, கொள்ளை வழக்காக முடிக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த வழக்கு துாசி தட்டப்பட்டது. இப்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை, 230க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களில், இறந்து போன கனகராஜை தவிர, மற்ற குற்றவாளிகள் அனைவருமே கேரளாவை சேர்ந்தவர்கள்.
அதன் பின்னணியில், கேரளாவை சேர்ந்த அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி செயலர் சஜீவன் இருப்பதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. கோடநாடு எஸ்டேட்டில் அனைத்து மர வேலைப்பாடுகளையும் செய்தவர், அதன் அமைப்பை அறிந்தவர் என்பதால், அங்குள்ள ஆவணங்களை கொள்ளை அடிப்பதற்கு, அவரே ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார் என்றும் பலரும் சந்தேகம் எழுப்பினர்.
ஆனால், சம்பவம் நடந்த போது, அவர் துபாயில் இருந்ததால், தனக்கும், அந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சஜீவன் மறுத்தார். அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து விட்டே, துபாய் சென்று விட்டதாகவும், அதற்கு பரிசாகவே அவருக்கு மாநில நிர்வாகி பதவி தரப்பட்டதாகவும் பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த வழக்கில் சஜீவனும் விசாரிக்கப்பட்டார்.
இப்போது வரையிலும் இந்த வழக்கில் பெரியளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் தான், கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அருகில், கூடலுார் அல்லுார் வயல் பகுதியில், தனியார் எஸ்டேட்டில் சருகுமான், காட்டுமாடு ஆகியவற்றை வேட்டையாடிய சிலரை வனத்துறையினர் கைது செய்தனர். நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்களையும் கைப்பற்றினர்.
சஜீவனுக்கு சொந்தமான எஸ்டேட்டில் இவற்றை கைப்பற்றியதால், வேட்டையாடியவர்கள் மீதும், சஜீவன் மீதும் வனத்துறை மற்றும் கூடலுார் போலீசாரால் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இதில், சஜீவன் கைது செய்யப்பட்டால், அதை வைத்து கோடநாடு வழக்கில் நடந்த உண்மை விபரங்களை வெளியில் கொண்டு வந்து விடலாம் என, தமிழக போலீஸ் உயரதிகாரிகள் சிலர் நினைத்திருந்தனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க., மிக முக்கிய புள்ளிகளை தொடர்புபடுத்தி, அமைச்சர் உதயநிதி உட்பட அக்கட்சி நிர்வாகிகள் பலரும் கடும் விமர்சனம் செய்து வந்த நிலையில், வேட்டை சம்பவத்தில் சஜீவன் சிக்கியது, பெரும் திருப்பமாக கருதப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலினும், இதில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்ததாக தெரியவந்துள்ளது.
ஆனால், வன விலங்குகள் வேட்டை சம்பவத்தில், சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டிருப்பது குறித்து, அவருக்கு முன் கூட்டியே தகவல் தெரிந்து விட்டதால், அவர் அவசர, அவசரமாக துபாய் தப்பிச் சென்றுள்ளார். இதன் பின்னணியில், சஜீவனுடன் தொடர்பில் உள்ள தமிழக வனத்துறை உயரதிகாரிகள் சிலரும், நீலகிரி காவல்துறையில் உள்ள சிலரும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கோர்ட்டில் ஜாமின் பெற்ற பின்பே, சஜீவன் வருவதற்கு வாய்ப்புள்ளதால், கோடநாடு வழக்கில் மிக முக்கியமான பிடி நழுவி விட்டதாக காவல்துறை உயரதிகாரிகள் கடும் விரக்தியில் உள்ளனர். மாநில அரசுத்துறைகளில் அ.தி.மு.க., ஆதிக்கமும் இதில் உறுதியாகியுள்ளதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கோபம் அடைந்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.
சஜீவன் துபாய் தப்பிச் செல்ல உதவிய அதிகாரிகள் யார் என்ற விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.
- நமது நிருபர் -

