தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ எதிர்கால தேர்தல்களுக்காக வழக்கு

எதிர்கால தேர்தல்களுக்காக வழக்கு

எதிர்கால தேர்தல்களுக்காக வழக்கு


ADDED : ஏப் 06, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'லோக்சபா தேர்தல், ஏப்., 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில், 3ம் தலைமுறை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக, உரிய விதிமுறைகளை வகுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து, சமூகத்தில் அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில், அச்சு இயந்திரத்தை வைக்கக்கூடாது என, உத்தரவிட வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகை சீட்டு இயந்திரத்தை இணைப்பது, தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தேர்தல் நெருங்கிய நிலையில், தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, மனுதாரர் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ''எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு தான், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ''கடந்த 2013 முதல் 3ம் தலைமுறை ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2021ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், இதே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த தேர்தலில் மனுதாரர் சார்ந்த கட்சி வெற்றி பெற்றது. தற்போது, இந்த வழக்கை ஏற்றால், அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.

அப்போது, 'நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை என, மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளதால், இம்மனுவை பின்னர் பரிசீலிக்கலாம்' என்று கூறி, விசாரணையை, ஜூன், 25க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us