ADDED : ஜூன் 28, 2024 07:22 AM
மதுரை: நீர்வளத்துறையில் இருந்து பிற துறைகளுக்கு அயல்பணியாக அதிகாரிகள் பதவி உயர்வுடன் மாற்றப்படும் போது, பொதுப்பணித்துறைக்கு மட்டும் மாற்றாமல் ஏமாற்றுகின்றனர் என நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2007 ல் நீர்வளத்துறையில் உதவி பொறியாளர்களாக பதவியில் சேர்ந்தவர்கள் (பட்டதாரி பொறியாளர்கள்) 17 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.
உதவி பொறியாளர்கள் தெரிவித்ததாவது: பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை தனிப் பிரிவாக உருவாக்கப்பட்ட பின் 2007 ல் பணியில் சேரும் போதே நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை என பிரித்து உதவி பொறியாளர்களை நியமித்தனர்.
ஆனால் அலுவலகப்பணியில் உள்ள ஜூனியர் உதவியாளர்கள், உதவியாளர்கள், வரைதொழில்அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் பணியிடங்களுக்கு தற்போதும் பாரபட்சமின்றி இரு துறைகளிலும் பதவி உயர்வு வரை அனுமதிக்கின்றனர்.
2007 பேட்சில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்களாக சேர்ந்த அனைவரும் உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். அதே ஆண்டில் நீர்வளத்துறையில் உதவி பொறியாளர்களாக சேர்ந்த 450 பேரில் கடந்தாண்டு வரை 340 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதியுள்ள 110 பேருக்கு தற்போது வரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 40 மட்டுமே உள்ளது. இதே பொதுப்பணித்துறையில் 2007 பேட்ச் முடிந்து அடுத்து 2015, 2019 பேட்ச் உதவி பொறியாளர்கள் பதவி உயர்வு பெற தயாராக உள்ளனர்.
நீர்வளத்துறையில் பதவி உயர்வு பெறும் உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மீன்வளத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை, நுகர்பொருள் வாணிப கழகத்தில் அயல்பணியாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களது சீனியாரிட்டி நீர்வளத்துறையில் தான் இருக்கும். இந்த துறைகளில் அயல்பணியாக நியமிக்கப்படும் போது தாய்த்துறையான பொதுப்பணித்துறைக்கு மட்டும் அயல்பணியாக நியமிக்க மறுக்கின்றனர். இதனால் எங்களது பதவி உயர்வு பறிபோகிறது.
மற்ற அயல்பணிகளோடு பொதுப்பணித்துறையையும் அயல்பணியாக கணக்கில் கொண்டு அங்குள்ள காலிப்பணியிடத்திற்கேற்ப எங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றனர்.

