பிறந்தநாள் கொண்டாட்டம் கொலையில் முடிந்தது * மதுரையில் 23 நாளில் 14 கொலைகள்
பிறந்தநாள் கொண்டாட்டம் கொலையில் முடிந்தது * மதுரையில் 23 நாளில் 14 கொலைகள்
ADDED : ஜூலை 24, 2024 09:31 PM
மதுரை:மதுரையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
மதுரை புதுார் அல்அமீன் நகர் ராஜா உசேன் 43. டிராவல்ஸ் உரிமையாளர். தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் 25. நண்பர்களான இவர்களிடம் ஜெய்ஹிந்த்புரம் 30 வயது பெண் நட்பாக பழகினார். இவரை சரவணகுமார் காதலித்தார். நேற்றுமுன்தினம் இரவு மற்றொரு தோழியின் பிறந்தநாளை கொண்டாட ராஜாஉசேன், அவரது நண்பர் பரவை முருகன் (எ) ரஞ்சித்குமார் 32, ஆகியோருடன் காரில் மதுரை - நத்தம் ரோட்டில் காஞ்சரம் பேட்டை அருகேயுள்ள ஓட்டலுக்கு 3 பெண்கள் காரில் சென்றனர்.
அப்போது சரவணகுமார் தான் காதலிக்கும் பெண்ணிடம் 'எங்கே இருக்கிறாய்' என போனில் விசாரித்தபோது ஓட்டலுக்கு செல்வது தெரிந்தது. ஆத்திரமுற்றவர், தனது நண்பர் தல்லாகுளம் இஷாக் (எ) காதர் இஸ்மாயிலுடன் 29, டூவீலரில் ஓட்டலுக்கு தேடிச்சென்றார். அங்கு ராஜா உசேனிடம் தனது காதலியை அழைத்துவந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட, அருகில் இருந்த முருகன் ஆத்திரமுற்று கத்தியால் சரவணகுமாரையும், காதர் இஸ்மாயிலையும் குத்தினார். இதில் காதர் இஸ்மாயில் இறந்தார். சரவணகுமார் சிகிச்சையில் உள்ளார். முருகனை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி கைது செய்தார்.
போலீசார் கூறியதாவது:
சரவணகுமார் கேட்டரிங், பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது பெண்களை நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பாளராக அழைத்துச்செல்வார். அப்படிதான் 30 வயது பெண் அறிமுகமானார். கொலையாளி முருகனும் கேட்டரிங் தொழிலில் ஈடுபடுபவர். இதனால் சரவணகுமாருடன் நட்பு ஏற்பட்டது. இவர்களது நண்பரான ராஜா உசேன் டிராவல்ஸ் கார் டாக்சி தொழில் துவக்கியபோது இருவரும் உதவியாக இருந்தனர். இச்சூழலில்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தனக்கு தெரியாமல் காதலியை அழைத்துச் சென்றது குறித்து ராஜாஉசேனிடம் சரவணகுமார் கேட்டபோது தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்தது என்றனர்.
14 கொலைகள்
மதுரையில் ஜூலை முதலே தொடர்ந்து கொலைகள் நடந்து வருகின்றன. நேற்றுமுன்தினம் (ஜூலை 23)நடந்த கொலையை கணக்கிட்டால் 23 நாளில் நகைக்காகவும், முன்விரோதமாகவும், போதையிலும்தான் 14 கொலைகள் நடந்துள்ளன.
போலீசார் கூறுகையில் 'பெரும்பாலான கொலைகள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தவை. சட்டம் ஒழுங்கு கெடும் வகையிலான கொலைகள் நடந்ததாக முடியாது. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். சில வழக்குகளில் கொலையாளிகளை நெருங்கிவிட்டோம்' என்றனர்.

