பெயர் மாற்றத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் மதுரையில் பில் கலெக்டர், உதவியாளர் கைது
பெயர் மாற்றத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் மதுரையில் பில் கலெக்டர், உதவியாளர் கைது
ADDED : மே 18, 2024 04:43 AM

மதுரை : மதுரையில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் ஆறுமுகம் 50, அவரது உதவியாளர் சுதாகரன் 25, கைது செய்யப்பட்டனர்.
மதுரை கண்ணனேந்தலைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் பரசுராமன் 74. மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை மகன் ஈஸ்வர கண்ணனுக்கு தானமாக வழங்கினார். இதனால் மகன் பெயருக்கு சொத்து வரி மாற்றம் செய்ய மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த மனு கண்ணனேந்தல் பில் கலெக்டர் ஆறுமுகத்தின் ஒப்புதலுக்கு வந்தது.
பெயர் மாற்றம் செய்ய பரசுராமனிடம் ஆறுமுகம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். தரமறுத்தவரிடம் 'பேச்சுவார்த்தை' நடத்திய ஆறுமுகம் இறுதியாக 'ரூ.10 ஆயிரம் தந்தால் மட்டுமே ஒப்புதல் அளிப்பேன்' என திட்டவட்டமாக கூறினார். இதுகுறித்து லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் பரசுராமன் புகார் அளித்தார்.
நேற்று காலை கண்ணனேந்தலில் உள்ள பில் கலெக்டர் அலுவலகத்தில் பரசுராமனிடம் ஆறுமுகமும், உறவினரான மாநகராட்சி ஊழியர் அல்லாத உதவியாளர் சுதாகரனும் லஞ்சம் பெற்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, சூரியகலா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

