கச்சத்தீவை மீட்பதற்காக போராடிய ஒரே கட்சி அ.தி.மு.க.,தான்: இ.பி.எஸ்
கச்சத்தீவை மீட்பதற்காக போராடிய ஒரே கட்சி அ.தி.மு.க.,தான்: இ.பி.எஸ்
ADDED : ஏப் 02, 2024 07:16 PM

கிருஷ்ணகிரி:கச்சத்தீவை மீட்பதற்காக போராடிக்கொண்டிருந்த ஒரே கட்சி அ.தி.மு.க.,தான் என இ.பி.எஸ் கூறினார்.
கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து கார்னேஷன் திடலில் நடந்த பொது கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: மத்தியில் காங்.,கும் மாநிலத்தில் தி.மு.கவும் ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை மீட்டெடுப்பதற்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
கச்சத்தீவை மீட்டெடுக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். கச்சத்தீவு பிரச்னையை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டது. பா.ஜ.,அரசு. கச்சத்தீவை மீட்பதற்காக போராடிக்கொண்டிருந்த ஒரே கட்சி அ.தி.மு.க.,தான். மீனவர்கள் சிறைபிடிக்கும் போது மீனவர்கள் பற்றியும் கச்சத்தீவு பற்றியும் மத்திய அரசு கவலை கொள்ளவில்லை,
ஜெ.,ஆட்சியின் போது வருவாய்துறை சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசியல் ஆதாயம் காணுவதற்காக தேர்தலை முன்னிட்டு கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கிறது. பா.ஜ., கச்சத்தீவை வழங்கியதை மறுபரிசீலனை செய்வோம் என மத்தியஅரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, பாலியல் வன்முறை அரங்கேறி வருகிறது.மேலும் போதைபொருள் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வாக்கு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் திமுக அரசுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்.திமுக பதவியேற்ற மூன்று மாதங்களில் என்ன செய்தார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். மன்னராட்சி, அரச பரம்பரை போல ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் தி.மு.க.வில் பதவிக்கு வருகிறார்கள்.
ஊழல், கடன்வாங்குவது,போதைபொருள் விற்பனையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. போதைபொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது. நம்பிள்ளைகளை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். திமுக அரசால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை,திமுக அளித்த 520 தேர்தல் அறிக்கைகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.
சிமெண்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமானபொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. நீ்ட் தேர்வை கொண்டு வந்தது காங்., அரசும் திமுக வும் தான். நீட் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்தது அதிமுக தான். நீட்தேர்வை ரத்து செய்வதற்கான போராட்டம் நடத்துவதாக திமுக கூறுவது ஏமாற்று வேலை .பெட்ரோல்,டீசல் விலையை தமிழகத்தில் குறைப்பதற்கு திமுக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.

