60 டி.எம்.சி., நிரம்பினால்தான் மேட்டூர் அணை திறப்பு
60 டி.எம்.சி., நிரம்பினால்தான் மேட்டூர் அணை திறப்பு
ADDED : ஜூலை 23, 2024 05:34 AM
சென்னை : மேட்டூர் அணை, 60 டி.எம்.சி., நிரம்பிய பிறகே, பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என, நீர்வளத்துறையினர் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை வாயிலாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கரூர், நாமக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையும் தீர்க்கப்படுகிறது.
இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி.,யாகும். தற்போது, அணையில் 37.4 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 66,000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து கிடைத்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்காக, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஜூன் 12ல், முறைப்படி நீர் திறந்திருக்க வேண்டும். போதிய நீர் இல்லாததால், அணை திறக்கப்படாமல் இருந்தது.
தற்போது, நீர் இருப்பு அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம், 60 டி.எம்.சி.,க்கு மேல் அணை நிரம்பினால் மட்டுமே, குறுவை பாசனம் மட்டுமின்றி சம்பா, தாளடி பாசனத்திற்கு நீர் வழங்க முடியும்.
எனவே, அதற்கு முன் நீர் திறக்க வேண்டாம் என, அரசிற்கு நீர்வளத்துறையினர் பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, நீர் திறப்பது முதல்வர் ஸ்டாலின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிகிறது.

