கட்டட விதிமீறலை தடுக்க ரூ.3.50 கோடியில் சாப்ட்வேர்
கட்டட விதிமீறலை தடுக்க ரூ.3.50 கோடியில் சாப்ட்வேர்
ADDED : ஏப் 10, 2024 02:37 AM
சென்னை, : விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை துல்லியமாக கண்காணிக்க, புதிய சாப்ட்வேர் உருவாக்கும் பணி துவங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திட்ட அனுமதி பெற்றவர்கள் அதற்கு மாறாக, கூடுதல் பரப்பளவு, கூடுதல் தளங்களுடன் கட்டடங்கள் கட்டுவது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், நடவடிக்கை எடுப்பதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது, கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கட்டடம் கட்டப்படும் நிலத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை விபரங்கள் வரைபடத்தில் குறிப்பிடப்படுகின்றன.
மேலும், ஒவ்வொரு இடத்தின், ஜி.ஐ.எஸ்., எனப்படும், புவியிட தகவல் அமைப்பு வாயிலான விபரங்களும் பெறப்படுகின்றன. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிலத்தில் கட்டப்படும் கட்டடத்தின் அளவுகள் தொலையுணர்வு செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக புதிய சாப்ட்வேர் தயாரிக்க, 3.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வரும் போது, விதிமீறல் கட்டடங்கள் குறித்த துல்லியமான விபரங்கள் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் கிடைத்து விடும். இது அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவுபடுத்த உதவும். இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

