தேர்தலுக்காக 17, 18ம் தேதிகளில் 10,214 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தேர்தலுக்காக 17, 18ம் தேதிகளில் 10,214 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஏப் 09, 2024 04:55 AM
சென்னை : 'லோக்சபா தேர்தலையொட்டி, வரும், 17, 18ம் தேதிகளில், 10,214 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி, போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளும் சிறப்பு ஏற்பாடு மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் 19ம் தேதி நடக்க உள்ள லோக்சபா தேர்தலையொட்டி, வரும் 17, 18ம் தேதிகளில், சென்னையில் இருந்து தினமும் இயக்க கூடிய, 2,092 பஸ்களுடன், இரண்டு நாட்களுக்கு 2,970 சிறப்பு பஸ்கள் சேர்த்து, 7,154 பஸ்களும்; பிற ஊர்களில் இருந்து இரண்டு நாட்களுக்கு, 3,060 சிறப்பு பஸ்கள் என, 10,214 பஸ்கள் இயக்கப்படும்
தேர்தல் முடிந்த பின், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 20, 21ம் தேதிகளில் தினமும் இயக்கப்படும், 2,092 பஸ்களுடன் இரண்டு நாட்களுக்கு, 1,825 சிறப்பு பஸ்கள் சேர்த்து, 6,009 பஸ்களும்; ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, 2,295 சிறப்பு பஸ்கள் என, 8,304 பஸ்களும் இயக்கப்படும்
பொதுமக்கள், tnstc official app மற்றும் www.tnstc.in என்ற இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்
அரசு போக்குவரத்து கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு பஸ்கள் எங்கிருந்து புறப்படும் என்ற விபரங்களும் தெரிவிக்கப்பட்டுஉள்ளன.

