/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள்... கவலை: சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் காத்திருப்பு
/
தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள்... கவலை: சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் காத்திருப்பு
தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள்... கவலை: சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் காத்திருப்பு
தென்பெண்ணையாறு வறண்டதால் விவசாயிகள்... கவலை: சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் காத்திருப்பு
ADDED : செப் 11, 2025 03:13 AM

திருக்கோவிலுார்:தென்பெண்ணை வறண்டதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியை ஒத்தி வைத்து கவலையுடன் காத்திருக்கின்றனர். தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவெடுத்து, தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் வழியாக 430 கி.மீ., பயணித்து வங்க கடலில் கலக்கிறது. இதன் குறுக்கே தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., சாத்தனுார் அணைகள் உள்ளன.
தென்மேற்கு பருவமழை காலத்தில் குறிப்பாக பெங்களூரு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக தென்பெண்ணையில் பெருக்கெடுக்கும் வெள்ளம், தமிழக எல்லையில் உள்ள கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., சாத்தனுார் அணைகள் நிரம்பி தென்பெண்ணையில் பிக்கெப், திருக்கோவிலுார், எல்லீஸ், சொர்ணாவூர் தடுப்பணைகளை தாண்டி வங்கக் கடலில் கலக்கிறது.
இதனிடையே கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள இந்த தடுப்பணைகளில் இருந்து கால்வாய்களுக்கு பிரித்து அனுப்பப்படும் தண்ணீரின் மூலம் ஏரிகள் நிரம்பி பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை துவக்கத்தில் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணைகள் நிரம்பி சாத்தனுார் அணைக்கு உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய நிலவரப்படி 120 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், 113.25 அடி, 6,077 மில்லியன் கன அடி நீர்மட்டுமே உள்ளது.
அணைக்கு 116 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் சாத்தனுார் அணை பெரும் பாலும் நிரம்பிவிடும்.
அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்படும். இதனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இருந்து தென்பெண்ணையில் தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்படும். அக்டோபர் மாதம் மத்தியில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிடும்.
அதனால் தொடர்ச்சியாக ஆறு மாதத்திற்கு மேல் தென்பெண்ணையில் தண்ணீர் வரத்து தொடர்ந்து இருக்கும்.
இதனை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்வர். இந்த ஆண்டு தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை போதிய அளவில் இல்லாததால் சாத்தனுார் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை.
இதனால் உபரி நீர் திறக்கப்படாததால், தென்பெண்ணை வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் செல்லும் ஏரிகளும் வறண்டு கிடக்கிறது. எனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக, ஆடி மாதம் நாற்றங்கால் தயார் செய்யும் பணியை சிறிது காலம் ஒத்தி வைத்துள்ளனர்.
சாத்தனுார் அணை, 83 சதவீதம் நிரம்பியுள்ள சூழலில் சம்பா சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.