/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளுக்கு விருது சாத்தியமானது எப்படி?
/
பள்ளிகளுக்கு விருது சாத்தியமானது எப்படி?
ADDED : மார் 10, 2024 12:51 AM

கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி உள்ளிட்ட பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்திய சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் விருதினை குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி; இடுவாய், பாரதிபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றுள்ளது.
விருது பெற்றது குறித்து இப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நம்மிடம் பகிர்ந்தவை:
அன்று 600... இன்று 1,500
காயத்ரி, தலைமை ஆசிரியர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி:
நகருக்குள் செயல்படும் இருபாலர் பயிலும் மேல்நிலைப்பள்ளி என்பதால், முதலில் ஒழுக்கத்தை மாணவ, மாணவியருக்கு கற்றுத்தருகிறோம். பள்ளியின் வளர்ச்சிப்பாதையில், கொண்டு செல்ல வேண்டும் என்பது தினசரி எண்ணமாகவே வளர்த்துக் கொண்டோம்.
கடந்த, 2017ல், 600 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, தற்போது, 1,500 ஆக உயர்ந்துள்ளது. மெட்ரிக் பள்ளி அளவுக்கு தரத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஆங்கில அறிவை மேம்படுத்த தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முயற்சியால், ஆங்கில மீடியத்தில் நிறைய மாணவர்கள் புதியதாக இணைந்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பில், 263 பேரும், பிளஸ் 1ல், 285 பேரும், பிளஸ், 2வில் 182 பேரும் உள்ளனர். தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சித்து, கடந்தாண்டு, 600க்கு, 552 மதிப்பெண் பெற்று, மாநகராட்சி பள்ளியில் முதலிடம் பெற்றோம்.
மேல்நிலைப்பள்ளி தேர்வெழுதும் மாணவ, மாணவியருக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக எடுத்துரைக்கிறோம். பள்ளிக்கு உதவி செய்யும் நல் உள்ளங்கள், பள்ளியின், 25 ஆசிரியர், பெற்றோரின் நல்ஒத்துழைப்பால் இவ்விருது சாத்தியமாகியுள்ளது.
இயற்கைச்சூழலுடன் பள்ளி
காளீஸ்வரி, தலைமையாசிரியர், பாரதிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி:
பள்ளிக்கு தலைமை ஆசிரியர் ஆனவுடன் பள்ளி இடவசதியை ஆராய்ந்தேன்; ஒரு ஏக்கர், பத்து சென்ட் இருந்தது. மைதான வசதியை மேம்படுத்தினோம். காய்கறி, பூத்தோட்டம் அமைத்து, பராமரிக்க துவங்கினோம். இயற்கை சூழலுக்கு பள்ளி மாறியது.
பள்ளியில் 'ஸ்மார்ட் கிளாஸ்', கம்ப்யூட்டர் வசதி, நுாலகம் உள்ளது; அறிவியல் உபகரணங்களுக்கு வாங்கப்பட்டுள்ளது. தற்போது, 395 குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். ஆறு வகுப்பறை உள்ளது.
எஸ்.எஸ்.ஏ., தன்னார்வலர்கள் உதவியுடன் கூடுதலாக ஆறு வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் இடைநிற்றல் இல்லாமல் தடுப்பதே முதல் பணியாக கொண்டுள்ளோம். பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தி, மாற்றியமைத்ததால், மாணவர் எண் ணிக்கை உயர்ந்துள்ளது. விருது சாத்தியமாகியது.

