/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நலத்துறைக்கு தனி தாசில்தார் பதவியிடம் அரசுக்கு தொடர் கோரிக்கை
/
நலத்துறைக்கு தனி தாசில்தார் பதவியிடம் அரசுக்கு தொடர் கோரிக்கை
நலத்துறைக்கு தனி தாசில்தார் பதவியிடம் அரசுக்கு தொடர் கோரிக்கை
நலத்துறைக்கு தனி தாசில்தார் பதவியிடம் அரசுக்கு தொடர் கோரிக்கை
ADDED : டிச 20, 2024 10:42 PM
உடுமலை; ஆதிதிராவிடர் நலத்துறைக்கான தனித்தாசில்தார் பதவியிடத்தை, உடுமலை வருவாய் கோட்டத்தில், உருவாக்க வலியுறுத்தி, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.
உடுமலை வருவாய் கோட்டத்திலுள்ள, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ஆதிதிராவிடர்கள் கணிசமான அளவு வசிக்கின்றனர். இவர்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்காக, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, ஆதிதிராவிட மாணவர்கள் கல்விக்காக, தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு, அரசால் பராமரிக்கப்படுகின்றன. உடுமலையில், மூன்று மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் ஆதிதிராவிட நலத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறையின் பணிகளை கண்காணிக்க வேண்டிய தனி தாசில்தார் பணியிடம், உடுமலை வருவாய் கோட்டத்தில், உருவாக்கப்படவில்லை.
தற்போது, துறை திட்டங்களுக்கு விண்ணப்பம் அளிப்பவர்கள் காங்கேயத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் விண்ணப்பதாரர்கள், அதிக செலவிட்டு, காங்கேயம் சென்று வருவதில் சிக்கல் நிலவுவதால், பல்வேறு அரசுத்திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் அதிகளவு பெறப்படுவதில்லை.
மேலும், பல கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டமும் தொய்வடைந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தமிழக அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பி வருகின்றனர்.
அம்மனுவில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலிருந்து, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை உட்பட நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம் அளிக்க காங்கேயம் செல்ல வேண்டியுள்ளது.
தாலுகா அலுவலகத்தில், விண்ணப்பம் அளித்து, அங்கிருந்து காங்கேயம் தனிதாசில்தாருக்கு அவ்விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நடைமுறையால், நலத்திட்டங்கள் உடனடியாக கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, உடுமலைக்கு தனி தாசில்தார் பணியிடத்தை உருவாக்கி, அலுவலர் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

