/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகள் கேட்கப்படும்: தீர்வுகள் கொடுக்கப்படாது!
/
குறைகள் கேட்கப்படும்: தீர்வுகள் கொடுக்கப்படாது!
ADDED : ஜூலை 08, 2024 11:18 PM

திருப்பூர்:குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது, அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். நேற்றைய முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம், 474 மனுக்கள் பெறப்பட்டன.
'கருவலுார் வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும். கோவிலை சீரமைக்க வேண்டும்' என, இந்து சமத்துவ கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அனைத்து பனியன் தொழிற்சங்க பிரதிநிதிகள் அளித்த மனு: திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளபோதிலும், துறைவாரியாக மருத்துவர்கள், ஊழியர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
மருத்துவமனை இருந்தும், சிகிச்சை பெறமுடியாத நிலையே நீடிக்கிறது. போதிய மருத்துவர்களை நியமித்தும், நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கி, மருத்துவமனையை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இ.எஸ்.ஐ., - பி.எப்., தொடர்பாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும்வகையில், மாவட்ட அளவில் குறைகேட்பு கூட்ட ங்கள் நடத்தப்படவேண்டும். அனைத்து பனியன் உற்பத்தி நிறுவனங்களிலும், தொழிலாளர், தொழிற்சாலை சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
அவிநாசி ஒன்றியம், 19வது வார்டு கவுன்சிலர் முத்துசாமி (மா.கம்யூ.,): அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி - சென்னிமலை கவுண்டர் நகரில், 83 குடியிருப்புகள் உள்ளன. வஞ்சிபாளையம் உயர்நிலைப் பள்ளி அருகே செல்லும் சாலையில், புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபற்றுவருகிறது.
இதனால், சென்னிமலை கவுண்டர் நகர் மக்களுக்கு, சாலை வசதி இல்லாத நிலை ஏற்படுகிறது. அம்மக்களுக்கு மாற்று சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
பல்லடம் பஸ் ஸ்டாண்ட் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளை பொது பயன்பாட்டுக்கு அறிவிக் வேண்டும். ஆட்டோக்கள் வரிசையில் நின்று வாடகைக்கு எடுக்கும் முறையை அறிவித்தால், அனைத்து டிரைவர்களும் பயன்பெறுவர். குறிப்பிட்ட ஒரு அமைப்பு ஆட்டோ டிரைவர்கள் மட்டும், ஸ்டாண்டுகளை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ்: மத்திய அரசு, ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், திருப்பூரில் உள்ள ரேஷன் கடை களுக்கு, குடிமைப் பொருள் வழங்கல் துறை, கூடுதல் உணவுப்பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில்லை.
இதனால், புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள், அருகிலுள்ள ரேஷன்கடைகளில் உணவுப்பொருட்கள் பெறமுடியாத நிலையே நீடித்து வருகிறது.
இதனால், ரேஷன் விற்பனையாளர்-கார்டுதாரர் இடையே இது தொடர்பாக வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. வட மாநில தொழிலாளர்களின் ரேஷன் கார்டுகளை கணக்கெடுத்து, குறிப்பிட்ட ரேஷன் கடைகளுக்கு கூடுதல் உணவுப்பொருள் ஒதுக்கீடு செய்யவேண்டும்.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள், அமைப்பினர் பலரும் குறைகேட்டு கூட்டத்தில் மனு அளித்தனர்.

