/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரவை இலக்கு... தொடர் சரிவு!:16 ஆண்டுகளில் இரண்டாண்டு மட்டுமே சாதனை
/
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரவை இலக்கு... தொடர் சரிவு!:16 ஆண்டுகளில் இரண்டாண்டு மட்டுமே சாதனை
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரவை இலக்கு... தொடர் சரிவு!:16 ஆண்டுகளில் இரண்டாண்டு மட்டுமே சாதனை
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரவை இலக்கு... தொடர் சரிவு!:16 ஆண்டுகளில் இரண்டாண்டு மட்டுமே சாதனை
ADDED : ஏப் 14, 2024 01:47 AM

திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கடந்த 15 ஆண்டுகளில், 2 ஆண்டுகள் மட்டுமே அரவை இலக்கை தாண்டிஉள்ளது. நடப்பாண்டும் 2.50 லட்சம் டன் கரும்பு அரவை இலக்கை எட்ட முடியாமல், 1.96 லட்சம் டன் மட்டும் அரைத்துள்ளதால், தொடர்ந்து சரிவை கண்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 'கரும்பு அரவை இலக்கை எட்ட வேண்டுமானால், ஆலையை மேம்படுத்துவது அவசியம்' என, கூறுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலைக்கு அரக்கோணம், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு டிராக்டர், லாரி வாயிலாக வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.
நடப்பாண்டான 2023 - -24ல் கரும்பு அரவை 2.50 லட்சம் டன் இலக்கு நிர்ணயித்து நவம்பர் 24ம் தேதி அரவை துவங்கியது.
இதற்காக 2,100 விவசாயிகளிடம் இருந்து 8,700 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்புகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அரவை துவங்கி நடைப்பெற்ற நிலையில், நேற்று முன்தினத்துடன் அரவை முடிந்தது. 1.96 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு உள்ளது.
இது கடந்தாண்டை விட குறைவு. இதற்கு ஆலை மேம்படுத்தாததே காரணம் என, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2008ல் இருந்து அரவை துவங்கியதில், தொடர்ந்து 13 ஆண்டுகளாக இலக்கை எட்ட முடியவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் மட்டும் இலக்கை தாண்டியது. தற்போது நடப்பாண்டிலும் இலக்கை எட்ட முடியவில்லை.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:
ஆலையை மேம்படுத்தாத வரை இலக்கை எட்டுவது கடினமாகும். தினமும் 2,100 டன் கரும்பை அரைக்க வேண்டிய இயந்திரம் 1,000 - -1,500 டன் கரும்பை மட்டுமே அரைக்கிறது. 40 ஆண்டுகள் பழமையான இயந்திரத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மார்ச் மாதத்திற்கு பின் வெட்டுக்கூலிக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் கூலி 1,000 ரூபாயில் இருந்து 1,500 ஆக உயர்த்துகின்றனர்.
இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். மார்ச்சில் முடிய வேண்டிய அரவை ஏப்ரல் வரை இயங்க காரணம், ஆலையில் உள்ள இயந்திரம் அரைக்க தாமதம் ஏற்படுவது தான்.
ஆலையில் குறைந்தது 4 லட்சம் டன் கரும்பை அரைத்தால் தான் லாபத்தில் இயங்கும். அதற்கான முன்னெடுப்பை அரசு எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு அதிக விளைச்சல் உள்ளதால், ஆந்திராவுக்கு கரும்பு செல்கிறது. இங்கு அரவையை உயர்த்தினால், விவசாயிகள் நலன் பெறுவர். பலரும் கரும்பு விவசாயத்தில் இருந்து விலகும் நிலை உள்ளது. ஆலையை மேம்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வைக்கோல் விலையும் சரிவு
திருவாலங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2,500 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
இங்குள்ள வைக்கோலுக்கு திருத்தணி கனகம்மாசத்திரம் பகுதியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்தாண்டு ஒரு ஏக்கர் அறுவடை செய்த வைக்கோல் 800 ரூபாய் வரை விலை போன நிலையில், இந்தாண்டு 700 ரூபாய்க்கு தான் விலை போகிறது.
முன்னர் வைக்கோல் சுற்ற 1 மணி நேரத்திற்கு இயந்திர வாடகை 1,400 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 1,800 ரூபாய் இயந்திர வாடகை ஆகிறது.
கையால் அறுவடை செய்யும் போது நீளமான வைக்கோல் கிடைக்கும். இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது துண்டாகி விடுவதால், வைக்கோல் வீணாகிறது.
இந்த வைக்கோலை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க முடியாது என்பதால், வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். ஏற்கனவே விவசாயம் செய்வது சிரமமாக உள்ள நிலையில், வைக்கோல் விலை குறைவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

