/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகள் 1,280 : பயன்பாடில்லாததை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
/
பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகள் 1,280 : பயன்பாடில்லாததை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகள் 1,280 : பயன்பாடில்லாததை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகள் 1,280 : பயன்பாடில்லாததை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : மார் 11, 2024 07:19 AM

திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்பட்ட 10 ஆயிரம் லிட்டர் முதல் அதிகபட்சமாக இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு வரை மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குடிநீர் தொட்டிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிப்பு இல்லாததால் 30 சதவீத குடிநீர் தொட்டிகள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 4,200 மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,280 குடிநீர் தொட்டிகள் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் மோசமான நிலையில் உள்ளன.
மேலும் அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு அருகே வசித்து வரும் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் குடிநீர் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில ஊராட்சிகளில் குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், பொதுமக்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியத்தில் கடம்பத்துார், திருப்பந்தியூர், கல்லம்பேடு, ஏலம்பாக்கம், உட்பட பல ஊராட்சிகளில் பழுதடைந்துள்ள குடிநீர் தொட்டிகளை இடித்து அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சீரமைத்து தரவும், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகள் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பழுதடைந்து பயன்பாடில்லாத குடிநீர் தொட்டிகளை அரசு உத்தரவுக்குப்பின் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும' என்றார்.

