/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழமையான கைலாசநாதர் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
/
பழமையான கைலாசநாதர் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
ADDED : ஏப் 16, 2024 06:12 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் கிராமத்தில் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது.
வரலாற்று சிறப்புமிக்க திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் தோன்ற காரணமான கோவில் என, போற்றி புகழக்கூடிய ஸ்தலம் இது.
அதனால், வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத்தின் போது கொடியேற்றத்தின் முதல் நாள் புற்றுமண் எடுத்தல் நிகழ்வு இந்த கோவிலில் நடைபெற்று, பின்னர் வடாரண்யேஸ்வரர் கோவில் யாகசாலைக்கு அனுப்பப்படும்.
பின் அங்கு வைத்து 10 நாட்கள் பூஜிக்கப்பட்டு தீர்த்தவாரியன்று தீர்த்தத்தில் கரைப்பார்கள்.
அத்தகு சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு தென்புறத்தில் குளம் உள்ளது. இதில் நீராடினால் ஜென்ம தோஷம் தீரும் என்பது ஐதீகம்.
எனவே இக்குளத்தில் பக்தர்கள் நீராடி செல்வர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்குளம் பராமரிக்கப்படவில்லை. இதனால், தற்போது பாழடைந்து நீர் அசுத்தமாக காணப்படுகிறது.
எனவே பழமையான கோவிலின் குளத்தை சீரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதர் தீவைத்து அழிப்பு
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் கிராமத்தில், அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தின் நடுவே பொதுகுளம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
சுற்றுச்சுவர் கட்டப்பட்டதும், குளத்தின் பராமரிப்பு கேள்விக்குறியாக மாறியது. சுற்றுப்பகுதியில் வசிப்பவர்கள், குளத்தில் குப்பை கொட்ட துவங்கினர். குப்பையில், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியது.
சமீபத்தில், இந்த குளத்தில் உள்ள புதர், தீ வைத்து அழிக்கப்பட்டது.
தொடர்ந்து குளத்தை துார் வாரி சீரமைக்கவும், நீர்வரத்து கால்வாயை புனரமைக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குளத்தின் சுற்றுச்சுவர் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

