ADDED : ஏப் 12, 2024 11:53 PM

ஆவடி:ஆவடி அடுத்த பாலவேடு, சாஸ்திரி நகரில் 500 வீடுகளில் 2,000க்கும் மேற்பட்டோர் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.கடந்த 2008ல், இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட கலைஞர் இலவச பட்டாவை, கிராம நத்தம் பட்டாவாக மாற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதேபோல, அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்டவை செய்து தரக்கோரி, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், 200க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள், அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வீடுகளில் கறுப்பு கொடி கட்டி, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், கறுப்பு கொடிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அப்பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையிலான அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்த நிலையில், 'வரும் லோக்சபா தேர்தலுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம்' எனவும், அவர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர்.

