/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பட்டாசு ஆலையில் வெடி விபத்து 15 கட்டடங்கள் சேதம்
/
பட்டாசு ஆலையில் வெடி விபத்து 15 கட்டடங்கள் சேதம்
ADDED : மார் 24, 2024 02:06 AM
தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நேற்று மதியம் ஏற்பட்ட வெடி விபத்தில் 15க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
சங்கரன்கோவில் திருவேங்கடம் அருகே மைப்பாறையில் ஏ.வி.எம்., பட்டாசு ஆலையை சிவகாசியைச் சேர்ந்த வெங்கட்ரமணி நடத்தி வருகிறார். ஆலையைச் சுற்றிலும் மானாவாரி விளை நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. மக்காச்சோளம் அறுவடைக்குப் பிறகு கழிவுகளுக்கு அங்கிருந்தவர்கள் தீ வைத்தனர். மக்காச்சோளத் தோட்டத்தில் பரவிய தீ, பட்டாசு ஆலைக்குள்ளும் விழுந்தது.
நேற்று மதியம் 1:30 மணியளவில் உணவு இடைவேளையின் போது தீ உள்ளே பற்றி எரிவதை கண்ட காவலாளி இது குறித்து தகவல் தெரிவித்தார். அடுத்தடுத்து பட்டாசு ஆலை கட்டடங்களில் தீ பரவி வெடிவிபத்து ஏற்பட்டது. தீ பரவுவதை கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து உயிர் தப்பி வெளியேறினர்.சங்கரன்கோவில், கழுகுமலை, வெம்பக்கோட்டை நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆர்.டி.ஒ., கவிதா, எம்எல்.ஏ., ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சம்பவத்தில் ஆலை கட்டடங்கள் முழுவதும் சேதமடைந்தன.
தொழிலாளர்கள் காயம் இன்றி தப்பினர். சம்பவ இடத்தை கலெக்டர் கமல்கிேஷார், எஸ்.பி., சுரேஷ்குமார் பார்வையிட்டனர். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

