/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒரே கல்லில் சப்த கன்னியர் சிற்பம் திருப்பாச்சேத்தி அருகே கண்டெடுப்பு
/
ஒரே கல்லில் சப்த கன்னியர் சிற்பம் திருப்பாச்சேத்தி அருகே கண்டெடுப்பு
ஒரே கல்லில் சப்த கன்னியர் சிற்பம் திருப்பாச்சேத்தி அருகே கண்டெடுப்பு
ஒரே கல்லில் சப்த கன்னியர் சிற்பம் திருப்பாச்சேத்தி அருகே கண்டெடுப்பு
ADDED : டிச 21, 2024 06:07 AM

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஏழு சப்த கன்னியர் சிற்பங்கள், லிங்க வழிபாடு செய்யும் நாக சிற்பங்களை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டெடுத்துள்ளனர்.
திருப்பாச்சேத்தியிலிருந்து படமாத்துார் செல்லும் ரோட்டில் வடக்கு கண்மாய் கரையோரம் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஸ்தல விருட்சமான நெய்கொட்டும் மரத்தின் அருகில் உள்ள சிற்பங்களை தொல்லியல் ஆர்வலர்கள் அய்யப்பன், சோணைமுத்து ஆய்வு செய்தனர்.
இதில் சப்த கன்னியர்கள் என்ற இரண்டடி உயரமும் ஐந்தடி அகலமும் உடைய இடது கால் மடக்கியும், வலதுகால் தொங்க விடப்பட்ட நிலையிலும், இடது கை இடதுகால் மேல் வைத்து வலது கரத்தில் மலரினை பிடித்தவாறு அமர்ந்த நிலையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களை கண்டனர். சப்த கன்னியர்களின் சிற்பங்களான இதன் அருகில் நாகபந்தம் என அழைக்கப்படும்பாம்புகள் இணைந்து ஆடகூடிய சிற்பமும் உள்ளது.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவி வாஹினி கூறுகையில் :
சப்த கன்னியர் கிராம மக்களின் காவல் தெய்வமாக திகழ்கின்றனர். சோழர் காலத்தில் சப்த கன்னியர்களுக்கு தனி கோவில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்துள்ளது. அதன் பின் சப்தகன்னியர் அனைவரும் ஒரே கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.
ஒரு சில இடங்களில் ஏழு செங்கற்களை சப்த கன்னியர்களாக நினைத்து வழிபடுவதுண்டு.
தீமையை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டும் அன்னையாகவும், குலம் தழைக்கவும் அருள்புரிபவர்கள் சப்த கன்னியர் என நம்பப்படுகிறது. குல தெய்வம் தெரியாதவர்கள் சப்த கன்னியர்களை குலதெய்வமாக வழிபடுவதுண்டு. நாகதோஷம் நீங்கவேண்டி நேர்த்திக்கடனாக நாகபந்த சிற்பங்களை வைப்பது வழக்கம், என்றார்.
சிற்பங்கள் குறித்து சோனைமுத்து கூறியதாவது: திருப்பாச்சேத்தியில் மிகப்பழமையான கோவில்கள் காலப்போக்கில் சேதமாகி விட்டன. அவற்றில் தென்பட்ட சிலைகள் இன்று சில கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடந்து வருகின்றன. அதில் இருந்த சப்த கன்னிகள், நாகபந்தம் சிற்பங்கள் இருக்கலாம்.
இப்பகுதிகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.

