/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆங்கில புத்தாண்டு பிறப்பு; கோவில்களில் சுவாமி தரிசனம்
/
ஆங்கில புத்தாண்டு பிறப்பு; கோவில்களில் சுவாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டு பிறப்பு; கோவில்களில் சுவாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டு பிறப்பு; கோவில்களில் சுவாமி தரிசனம்
ADDED : ஜன 02, 2024 10:19 AM
சேலம்: ஆங்கில புத்தாண்டு (2024) பிறப்பையொட்டி, சேலத்தில் உள்ள கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பலர் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
டவுன் ராஜகணபதி கோவிலில் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோட்டை மாரியம்மன் கோவில் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. குமாரசாமிபட்டியில் உள்ள எல்லைபிடாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம், ரெட்டியூர் வாராஹி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம், தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் கோட்டை பெருமாள் கோவில், வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஆத்துார், வெள்ளை விநாயகர் கோவிலில், தங்க கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், ஆத்துார் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், பெரியமாரியம்மன், குபேர ஆஞ்சநேயர், வீரஆஞ்சநேயர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* உத்தமசோழபுரம், பெரியநாயகி அம்மன் சமேத கரபுரநாதர் கோவிலில், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல் கரபுரநாதருக்கு வெள்ளி 'நாகாபரணம்' சார்த்தி புது வஸ்திரம் தரித்து சர்வ அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அரியானுார் 1,008 சிவாலயம், மகா சக்தி மாரியம்மன் கோவில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
* தலைவாசல் அருகே,
வீரகனுார், தென்கரை பகுதியில் தர்மசம்வர்தணி சமேத கங்கா
சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. உற்சவர் கங்காசவுந்தரேஸ்வரர், தர்மசம்வர்தணி திருமணக்கோல அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மூலவர் கங்காசவுந்தரேஸ்வரர் உருவ அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது சுவாமி முன், 2024ம் ஆண்டை குறிப்பிடும் வகையில், 2024 லட்டுகளை படையல் செய்து, பக்தர் களுக்கு வழங்கப்பட்டது.
* ஓமலுார், பெரிய மாரியம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். செவ்வாய்சந்தை அருகே உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். காருவள்ளி பிரசன்னவெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் நடந்தது.
* தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் நடை அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் இருந்த கைலாசநாதரை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து தரிசனத்திற்கு சென்றனர்.

