/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க.,வால் தமிழகத்துக்கு வளர்ச்சி இல்லை
/
அ.தி.மு.க.,வால் தமிழகத்துக்கு வளர்ச்சி இல்லை
ADDED : ஏப் 15, 2024 04:04 AM
ஆத்துார்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமையில் கூட்டணி கட்சியினர், ஆத்துார், நரசிங்கபுரம் மற்றும் ஆத்துார் ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.
அப்போது சிவலிங்கம் பேசியதாவது:
'திராவிட மாடல்' ஆட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், மக்களுக்குரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழக திட்டங்களை, அண்டை மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கைகாட்டுபவர் தான், இந்தியாவின் பிரதமராக வரமுடியும். தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுவதற்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு சட்டசபை தொகுதிகளில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மத்திய அரசின் திட்டங்கள், இத்தொகுதியில் செயல்படுத்தப்படும். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணியில் வேட்பாளர் மலையரசன் செயல்படுவார்.
மகளிர் உரிமைத் தொகை, டவுன் பஸ்சில் இலவச பயணம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள், மக்களிடம் எழுச்சி பெற்றுள்ளன. தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது, அரசு திட்டங்கள் எந்த அளவிற்கு சென்றுள்ளன என்பது தெரிகிறது. முதல்வரின் திட்டங்கள், மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. நகராட்சி, ஊராட்சிகளில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பா.ஜ., - அ.தி.மு.க., பொய் தகவலை கூறுகிறது. இவர்களால் தமிழகத்துக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. தி.மு.க., ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. விவசாயத்துக்கு தனியே பட்ஜெட் அறிவித்ததும், தி.மு.க., தான். விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். விவசாயிகளுக்கு உறுதுணையாக, தி.மு.க., அரசு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஆத்துார் ஒன்றிய செயலர் செழியன், நகர செயலரான, ஆத்துார் பாலசுப்ரமணியம், நரசிங்கபுரம் வேல்முருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், நரசிங்கபுரம் நகராட்சி தலைவர் அலெக்சாண்டர், காங்., மாவட்ட தலைவர் அர்த்தனாரி, ம.தி.மு.க., மாவட்ட செயலர் கோபால்ராசு, வி.சி., மாவட்ட செயலர் கருப்பையா, கொ.ம.தே.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

