/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதை நெல் விதைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம்
/
விதை நெல் விதைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 11, 2025 11:19 PM

கூடலுார், ; கூடலுாரில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் வயல்களில் உழவு பணிகளை மேற்கொண்டு, விதை நெல் விதைக்கும் பணியை துவங்கியுள்ளனர்.
கூடலுார் பகுதி விவசாயிகள் வயல்களில் கோடையில் காய்கறியும், பருவமழை காலத்தில் நெல் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு, முன்னதாகவே பருவமழை துவங்கி, வயல்களில் உழவு பணிக்கு தேவையான தண்ணீர் சரியான நேரத்தில் கிடைத்துள்ளது.
தொடர்ந்து, விவசாயிகள் வயல்களில் டிராக்டர் மூலம் உழவு பணிகளை மேற்கொண்டு, இப்பகுதியில் அதிகம் மகசூல் தரக்கூடிய, 'பாரதி; ஐ.ஆர்., 20; கோ-50; கந்தகசால்,' விதை நெல் விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வயல்களில் உழவு பணிகள் மேற்கொள்வதுடன், ஆடி மாதம், நாற்றுகள் பறித்து நடவு பணிகளை துவங்க உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் ஒரு காலத்தில் இருப்போகம் நெல் விவசாயம் நடந்தது. காலநிலை மாற்றத்தால், தற்போது பருவமழை காலத்தில் மட்டும் நெல் விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். 1,000 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்து வந்த நிலையில், வனவிலங்குகள் பிரச்னை, இடு பொருள்கள் விலை, தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்ற காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயத்தை தவிர்த்து, இஞ்சி, வாழை பயிரிட்டு வருகின்றனர்.
இதனால், நெல்விவசாயத்தில் குறைந்த அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு எந்த மானிய உதவியும் செய்வதில்லை.
இதனால், நெல் விவசாயத்தில் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து, எதிர்காலத்தில் நெல் விவசாயம் அழியும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, அரசு நெல் விவசாயிகளுக்கு தேவையான மானிய உதவிகளை செய்து தர வேண்டும்,' என்றனர்.

