/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஞ்சராகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு
/
பஞ்சராகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 20, 2024 06:17 AM

கூடலுார்: கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், அரசு பஸ் பஞ்சராகி நின்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் ஓவேலி ஆரூட்டுபாறையில் இருந்து, கூடலுார் நோக்கி வந்த அரசு பஸ், காலை, 10:45 மணிக்கு விநாயகர் கோவில் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், பின் டயர் பஞ்சராகி நின்றது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி மற்றும் ஓவேலி பகுதிகளில் இருந்து கூடலுார், கர்நாடகா செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன.
ஊழியர்கள், மாற்று டயரை, இறக்கி பஞ்சரான டயரை மாற்ற முடிவு செய்தனர். ஆனால், அதற்கான உபகரணங்கள் அவர்களிடம் இல்லை. அப்பகுதியில், நிறுத்தப்பட்ட கர்நாடகா பஸ் ஊழியர்கள் உபகரணங்களை, வழங்கி பஞ்சரான டயரை மாற்றுவதற்கு உதவி செய்தனர். தொடர்ந்து, பஸ் இயக்கப்பட்டு, 11:45 மணிக்கு போக்குவரத்து சீரானது.
பயணிகள் கூறுகையில், 'கூடலுாரில் இயக்கப்படும் பழைய பஸ்கள் அடிக்கடி பஞ்சராகி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

