/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அருகே கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் பலி: உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது
/
ஊட்டி அருகே கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் பலி: உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது
ஊட்டி அருகே கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் பலி: உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது
ஊட்டி அருகே கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் பலி: உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது
UPDATED : பிப் 08, 2024 01:33 PM
ADDED : பிப் 07, 2024 01:40 PM

ஊட்டி : ஊட்டி அருகே தடுப்பு சுவர் பணி மேற்கொள்ளும் போது, மண்சரிவு மற்றும் பழைய கழிப்பிட கட்டடத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து, 6 பெண்கள் பலியாகினர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே காந்திநகர் பகுதியில், கேரளாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ என்பவர் வீடு கட்டி வருகிறார். கடந்த, 6 மாதங்களாக கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று, வீட்டை ஒட்டி, 40 அடி நீளம், 30 அடி உயரம், 6 அடிக்கு பள்ளம் தோண்டி தடுப்பு சுவர் கட்டும் பணியில், பெண்கள் உட்பட, 17 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். பகல், 11:40 மணியளவில் தொழிலாளர்கள் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. திடீரென, மேல் பகுதியில் இருந்த கழிப்பிட கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், 12 பேர் கட்டட இடிப்பாட்டில் சிக்கி கொண்டனர்.
தகவலின் பேரில், சம்பவ பகுதிக்கு, ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜா, நகராட்சி கமிஷனர் ஏகராஜ், எஸ்.பி. சுந்தரவடிவேல், தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன் ஆகியோர் வந்து உடனடியாக மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன், பொக்லைன் பயன்படுத்தி, கட்டட இடிப்பாட்டில் சிக்கியவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ்மூலம், அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவத்தில் ஆறு பெண்கள் பலி
இச்சம்பவத்தில், காந்தி நகரை சேர்ந்த பாக்கியலட்சுமி, 42, ஷகிலா,35; மேல் தலையாட்டி மந்து பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, 40, உமா, 35; அண்ணாநகரை சேர்ந்த ராதா, 38; மேல் காந்தி நகரை சேர்ந்த சங்கீதா, 38 ஆகியோர் உயிரிழந்தனர்.
மகேஷ், 28, தாமஸ், 29, சாந்தி, 54, ஜெயந்தி, 55, ஆகியோர் காயமடைந்து, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''கட்டுமான பணி விபத்தில், 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த, 6 பேரில் இரண்டு பேர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு பெண்கள், 2 ஆண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' என்றார்.
அலட்சியமே காரணம்!
காந்திநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணராஜ் கூறுகையில், ''இந்த கட்டட விதிமீறல் குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, காந்திநகர் ஊர் மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தோம். சம்மந்தப்பட்ட தனியார் கான்ராக்டரிடம், அங்குள்ள கழிப்பிடத்திற்கு தடுப்பு சுவர் கட்டியபின், பணிகளை துவக்க வேண்டும் என்று தெரிவித்தும் அலட்சியமாக இருந்ததால், இந்த பெரும் விபத்து நடந்துள்ளது,'' என்றார்.
உயிர் கொடுத்த பெண் தொழிலாளி!
தொழிலாளி நந்தகுமார் கூறுகையில், ''நேற்று காலை முதல் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும், 11:40 மணியளவில் டீ குடித்து முடித்து வேலை செய்ய கிளம்ப தயாராகும் போது, மேல் புறத்தில் இருந்த, மண்சரிவு மற்றும் கழிப்பிட கட்டடம் கண் இமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்தது. சுதாரித்து கொண்ட பாக்கியா என்ற பெண் தொழிலாளி என்னை தள்ளியதால் நான் சிக்கவில்லை. ஆனால், அவர் சிக்கி கொண்டு என் கண் முன்னே உயிரிழந்தார்,'' என்றார்.
பொதுமக்கள் மறியல்!
ஊட்டியில் விதிமீறிய கட்டடத்திற்கு 'சீல்' வைக்க கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஸ்பென்ஷர் சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மக்களிடம் கலெக்டர் அருணா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மக்கள் கலைந்து சென்றனர். மறியலால், ஊட்டியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

