/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
/
பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 14, 2024 12:08 AM

பாலக்காடு:பாலக்காடு அருகே, அய்யப்புரம் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி அருகே உள்ளது அய்யப்புரம் பெருமாள்- -திரவுபதி சமேத அர்ஜுன- கணபதி- வீரபத்ர-கருட ஆழ்வார் சுவாமி கோவில். இக்கோவிலில் ராமமூர்த்தி பட்டாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று நடந்தன.
காலையில், மங்கல இசை வாத்தியத்துடன் விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், பூர்ணாஹுதி, வேதபாராயணம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, தீர்த்த கலசங்கள் எடுத்து வரப்பட்டு, கோவில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதேபோல், பரிவார தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், வள்ளி, -தெய்வானை சமேத சுப்பிரமணியர், முனீஸ்வரன் கோவில்களிலும், கோபுர விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில், திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு தசதரிசனம், மகா தீபாராதனை நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில், தீபாராதனை, விசேஷ பூஜைகள் நடந்தது. அதன்பின், கல்பாத்தியில் இருந்து பாண்டிமேளம் என்று அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க, யானை மீது உற்சவ மூர்த்தி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

