/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரம்ஜான் நோன்பால் 50 சதவீதம் முட்டை ஏற்றுமதி சரிவு கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு குறைப்பால் கவலை
/
ரம்ஜான் நோன்பால் 50 சதவீதம் முட்டை ஏற்றுமதி சரிவு கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு குறைப்பால் கவலை
ரம்ஜான் நோன்பால் 50 சதவீதம் முட்டை ஏற்றுமதி சரிவு கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு குறைப்பால் கவலை
ரம்ஜான் நோன்பால் 50 சதவீதம் முட்டை ஏற்றுமதி சரிவு கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு குறைப்பால் கவலை
ADDED : மார் 11, 2024 11:38 AM
நாமக்கல்: ரம்ஜான் விரதம் துவங்க உள்ளதால் வெளிநாட்டிற்கு முட்டை ஏற்றுமதி, 50 சதவீதம் சரிந்துள்ளது. அதன் காரணமாக, நாமக்கல் மண்டலத்தில், கொள்முதல் விலை, இரண்டு நாளில், 40 காசு குறைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில், 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.கடந்த, 1ல், 480 காசாக இருந்த முட்டை கொள்முதல் விலை, நேற்று முன்தினம், 20 காசு குறைக்கப்பட்டு, 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மேலும், 20 காசு சரிந்து, 440 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டு நாட்களில், 40 காசு சரிந்துள்ளது, பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: வடமாநிலங்களில் வெயில் காரணமாக நுகர்வு சரிந்துள்ளது. அதனால், அங்கு வாரம், ஒரு கோடி முட்டை விற்பனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது, குறைந்துள்ளது. அந்த மண்டலங்களில், கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். அதன்படி, தற்போது, 400 காசாக சரிந்துள்ளது. மேலும், ராம்ஜான் நோன்பு விரதம் துவங்க உள்ளது. அதையடுத்து, வெளிநாட்டுக்கு, மாதம், 10 கோடி முட்டை ஏற்றுமதி செய்தநிலையில், தற்போது, 50 சதவீதம் சரிந்துள்ளது.
'நெக்' விலையில் இருந்து, 30 முதல், 40 காசு வரை தற்போது, குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அவற்றை கருத்தில் கொண்டே, தற்போது, கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

