/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனித நேயத்தை வளர்க்கும் கல்வி அவசியம் முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
/
மனித நேயத்தை வளர்க்கும் கல்வி அவசியம் முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
மனித நேயத்தை வளர்க்கும் கல்வி அவசியம் முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
மனித நேயத்தை வளர்க்கும் கல்வி அவசியம் முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2025 04:20 AM

மதுரை: மனித நேயத்தை வளர்க்கும் கல்வி வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலையில் நடந்த பன்னாட்டு பயிலரங்கில் தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கருணாகரன் தெரிவித்தார்.
பல்கலை தமிழியல்துறை, மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியில் பல்கலை சார்பில் 'தமிழ் அற இலக்கியங்கள் - பன்முக பார்வை, அயலக மாணவர்கள் பரிமாற்றம், திறன் மேம்பாட்டு பயிலரங்கு' ஆக.,26 முதல் செப்.,8 வரை நடந்தது. இதன் நிறைவு விழாவில் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.
தேர்வாணையர் முத்தையா தலைமை வகித்து பேசுகையில், தொழில்நுட்ப புரட்சி அசுர வளர்ச்சியில் உள்ளது. அதேநேரம் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம், அற இலக்கியங்களை நாம் கற்பிக்க தவறி விட்டோமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்லுாரி மாணவர்களிடம் அற இலக்கியங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
கருணாகரன் பேசுகையில், மொழிகளில் ஒப்பீட்டு ஆய்வுகள் குறைந்துவிட்டன. தமிழ் ஆய்வாளர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனித நேயத்தை வளர்க்கும் உயர்கல்வி தேவையாக உள்ளது. ஆரோக்கியமான சமுதாய மேம்பாட்டிற்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்றார்.
பயிற்சியை நிறைவு செய்த மலேசிய பல்கலை மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடலாசிரியர் கொப்பையன் என்ற ராஜூ தேவரின் 'பேரையூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்' நுால் வெளியிடப்பட்டது.
பல்கலை தனி அதிகாரி வேளாங்கண்ணி ஜோசப், ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் சிவக்குமார், எஸ்.கோட்டப்பட்டி பராசக்தி கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெகதீசன், மலேசிய பல்கலை பேராசிரியர்கள் கார்த்திகேஸ் பொன்னையா, இளங்குமரன், பிராங்குலின், குச்சனுார் சனீஸ்வரா மடாலயம் நிறுவனர் ராஜேந்திரன், மயிலம் தமிழ் கலைஅறிவியல் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, இந்திய மொழிகளின் மத்திய அரசு நிறுவன முன்னாள் துணை இயக்குநர் நடராஜபிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.