/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிற்படுத்தப்பட்டோர் துறையில் சம்பளம் இல்லாததால் தவிப்பில் பணியாளர்கள்
/
பிற்படுத்தப்பட்டோர் துறையில் சம்பளம் இல்லாததால் தவிப்பில் பணியாளர்கள்
பிற்படுத்தப்பட்டோர் துறையில் சம்பளம் இல்லாததால் தவிப்பில் பணியாளர்கள்
பிற்படுத்தப்பட்டோர் துறையில் சம்பளம் இல்லாததால் தவிப்பில் பணியாளர்கள்
ADDED : ஜூலை 07, 2025 03:28 AM
மதுரை 'சம்பள ஒப்பளிப்பு சான்று வழங்காததால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் நிலஎடுப்பு அதிகாரிகள் சம்பளமின்றி சிரமப்படுகின்றனர்.
தமிழக அரசில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவருக்கு செயல்படுத்தப்படும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்திற்காக, 15 மாவட்டங்களில் 50 சிறப்பு நில எடுப்பு தற்காலிகப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
தனித்தாசில்தார், உதவியாளர் நிலையிலான குறுவட்ட அளவையர், இளநிலை உதவியாளர் நிலையிலான வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் மற்றும் சங்கிலியாளர் என பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
இப்பணியிடங்களில் பணியாற்றுவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர் வரையும், டிசம்பர் முதல் மே வரையும் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு முதன்மைச் செயலரால் பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
அதன்பின் சம்பள ஒப்பளிப்பு சான்று வழங்கப்பட்டு காஞ்சிபுரம், வேலுார், கடலுார், விழுப்புரம், கரூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்துார், தருமபுரி என 15 மாவட்டங்களில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுலர்கள், கருவூல அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.
பிற்படுத்தப்பட்டோர் முதன்மை செயலரால் ஆறுமாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் சம்பள ஒப்பளிப்பு சான்று இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் பணிமுடிந்து பல நாட்களாகியும் சம்பளம் வழங்கப்படவில்லை. மாத முதல்வாரத்தில் குடும்பச் செலவுக்கான தொகையை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பிற துறை அலுவலர்களைப் போல இவர்களுக்கும் மாத இறுதியில் சம்பளம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
நடவடிக்கை தேவை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் ஜெயகணேஷ் கூறியதாவது: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பணியாளர்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு, நில எடுப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பருக்குள் சம்பள ஒப்பளிப்பு சான்று வழங்கி அம்மாத இறுதி நாளில் மற்ற துறையினர் போல சம்பளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

