/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.1.5 கோடியில் ரயில் மின்தடம் பராமரிப்பு பணிமனை துவக்கம்
/
ரூ.1.5 கோடியில் ரயில் மின்தடம் பராமரிப்பு பணிமனை துவக்கம்
ரூ.1.5 கோடியில் ரயில் மின்தடம் பராமரிப்பு பணிமனை துவக்கம்
ரூ.1.5 கோடியில் ரயில் மின்தடம் பராமரிப்பு பணிமனை துவக்கம்
ADDED : மே 23, 2024 02:13 AM
மதுரை:காரைக்குடியில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் ரயில்களை பராமரிக்க ரூ. 1.5 கோடியில் பணிமனை துவக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி - காரைக்குடி - மானாமதுரையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் சீராக இயங்கவும், மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும் காரைக்குடியில் ஒரு பணிமனை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பணிமனை மே 20 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பணிமனையில் ரயில் பாதையில் இயங்கும் வகையிலான பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று தயார் நிலையில் உள்ளது. இந்த ரயில் பெட்டி மூலம் நடுவழியில் ஏற்படும் திடீர் மின்தடை பழுதுகளை எளிதாக சரி செய்ய முடியும்.
பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ரயில்களை தங்கு தடை இன்றி குறித்த காலத்தில் இயக்க முடியும். இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை இருபுறமிருந்தும் இயக்கலாம்.
இந்த ரயில் பெட்டி சிறிய பராமரிப்பு பணிமனை போல அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ரயில் டிரைவர் அறை, ஜெனரேட்டர், பராமரிப்பு தளவாட சாமான்கள் வைக்கும் பகுதி, நடுப்பகுதியில் மின்சார வயர்களை ஊழியர்கள் ஆய்வு செய்ய மேலே செல்லும் வகையிலான ஹைட்ராலிக் ஏணி, ஊழியர்கள் அமரும் பகுதி ஆகியவை உள்ளன.
ஹைட்ராலிக் ஏணி சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளது. மதுரை கோட்டத்தில் 1124 கி.மீ., ரயில் பிரிவில் 1742 கி.மீ., மின்மய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக மணப்பாறை, திண்டுக்கல், பழநி, மதுரை, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, துாத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாசரேத், ராஜபாளையம், புனலுார், காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன்களில் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மணப்பாறை, திண்டுக்கல், பழநி, மதுரை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, துாத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, காரைக்குடி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் பராமரிப்பு ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜபாளையத்திற்கு ஒரு பராமரிப்பு ரயில் பெட்டி விரைவில் வழங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

