/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 பவுன் பறிமுதல்
/
ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 பவுன் பறிமுதல்
ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 பவுன் பறிமுதல்
ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 பவுன் பறிமுதல்
ADDED : ஏப் 01, 2024 04:09 AM
ஓசூர்: ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், 1.20 கோடி ரூபாய் மற்றும் 100 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சீத்தாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் லோகேஷ்குமார், 35; பேரண்டபள்ளியில் ஜல்லி கிரஷர் வைத்துள்ளார்; கடந்த, 28ல் காரில் பெங்களூரு சென்றவர் மீண்டும் ஓசூர் திரும்பினார். ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் காரில் சோதனை செய்ததில், 10 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஓசூர் வருமான வரித்துறைக்கு தகவல் தரப்பட்டது.
இதன் அடிப்படையில் நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், லோகேஷ்குமார் வீட்டில், ஓசூர் வருமான வரித்துறை இணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான, ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை முடிந்தவுடன், அங்கிருந்த நிருபர்களை திசை திருப்ப, ஓசூர் டவுன் ஸ்டேஷனில் உயரதிகாரிகள் அழைப்பதாக போலீசார் கூறினர். நிருபர்களும் அங்கிருந்து சென்றனர். அதன்பின் காலை, 10:15 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள், லோகேஷ்குமார் வீட்டிலிருந்து ஒரு பெரிய டிராவல் பேக்கை எடுத்துக் கொண்டு, போலீசாரின் ரோந்து வாகனத்தில் ஏற்றி, மூக்கண்டப்பள்ளியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றனர். அங்கு பணத்தை எண்ணியதில், 1.20 கோடி ரூபாய் இருந்தது. மேலும் சோதனையில், 100 பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு பேரண்டப்பள்ளியில் உள்ள அவரது கிரஷரிலும் சோதனை நடந்தது.
லோகேஷ்குமார், கர்நாடகா மாநிலம் கே.ஆர்.புரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாத்தின் மருமகன்; எனவே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் பணத்தை வழங்க, வீட்டில் பதுக்கி வைத்திருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம் இதுகுறித்து லோகேஷ்குமார் எதுவும் தெரிவிக்கவில்லை.
கர்நாடகாவில் நேற்று முன்தினம், தனியார் கட்டுமான நிறுவனங்கள், அதன் உரிமையாளர் வீடுகளில் சோதனை நடந்தது. இதில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், லோகேஷ்குமார் வீட்டில் சோதனை நடந்திருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

