ADDED : ஜூன் 19, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டன. தங்கக்கவச அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.
ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சையில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையிலுள்ள தட்சிண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
