/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றில் அணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு காஞ்சியில் மார்ச் 7ல் கண்டன ஆர்ப்பாட்டம்
/
பாலாற்றில் அணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு காஞ்சியில் மார்ச் 7ல் கண்டன ஆர்ப்பாட்டம்
பாலாற்றில் அணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு காஞ்சியில் மார்ச் 7ல் கண்டன ஆர்ப்பாட்டம்
பாலாற்றில் அணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு காஞ்சியில் மார்ச் 7ல் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 27, 2024 10:15 PM
காஞ்சிபுரம்:பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், காஞ்சிபுரத்தில் மார்ச் 7ல், கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில் துவங்கும் பாலாறு, ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தில் திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கர்நாடகாவில் 93 கி.மீ., துாரமும், ஆந்திராவில், 33 கி.மீ., துாரமும், தமிழகத்தில் 222 கி.மீ., துாரமும் பாலாறு பாய்கிறது.
தமிழகத்தில் அதிகபடியான துாரம் பாயும் பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், போதிய தடுப்பணைகள் கட்டப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதியில் உள்ள ரெட்டி குப்பம் என்ற இடத்தில், பாலாற்றின் குறுக்கே, 215 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழா, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், பாலாற்று நீரை நம்பி, 100க்கும் மேற்பட்ட ஏரிகளும், அதன் வாயிலாக 50,000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும், தாம்பரம், பல்லாவரம் போன்ற இடங்களுக்கு பாலாறு கூட்டு குடிநீர் திட்டங்கள் பயன் தருகின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திருப்பாற்கடல், ஓரிக்கை ஆகிய இடங்களில் உள்ள பாலாற்றில் இருந்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு, பாலாற்றை நம்பி விவசாயிகள் மட்டுமல்லாமல், நகர்ப்புற மக்களும் வாழ்கின்றனர். ஆனால், பாலாற்றின் நீரோட்டம் குறையும் வகையில், மேலும் புதிய அணைகளை ஆந்திர அரசு கட்டுவதால், அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திர அரசின் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 7ம் தேதி, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம், விவசாயிகள் இணைந்து, காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
''பாலாற்றில் தண்ணீர் வருவது கேள்விக்குறியாகிவிடும். நிலத்தடி நீரும் குறைந்துவிடும். ஆற்று பாசனம் நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்,'' என, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் காஞ்சி மாவட்ட தலைவர், ஏ.எம்.கண்ணன் கூறியுள்ளார்.
''இந்த அணை கட்டுவதால் பல்வேறு பாதிப்புகள் வரும். தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, அணை கட்டுவதை நிறுத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சி மாவட்ட செயலர் கே.நேரு கூறியுள்ளார்.
''ஆர்ப்பாட்டத்திற்கு, அரசியல் கட்சியினரையும்அழைக்க உள்ளோம். அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,'' என, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியுள்ளார்.
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அடிக்கல் நாட்டு விழாவை, ஆந்திர முதல்வரே நடத்தியிருப்பது, 1992ம் ஆண்டு பன்மாநில நதி நீர் ஒப்பந்தத்தை மீறிய செயல். கர்நாடக மாநிலத்தோடு காவிரி பிரச்னை, கேரள மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை பிரச்னை என்ற வகையில், தற்போது பாலாற்றில் புதிய தடுப்பணை பிரச்னை எழுந்து இருக்கிறது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், மக்கள் நலனில் அக்கறை இல்லாத, தி.மு.க., ஆட்சி தான்.
பன்னீர்செல்வம்,
முன்னாள் முதல்வர்
பாலாற்றில் ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டதால், தமிழகத்தில் நீர்வரத்து குறைந்து, வறண்ட நிலைதான் உள்ளது. இந்நிலையில், ஆந்திர அரசு மீண்டும் ஒரு தடுப்பணையை கட்ட முயற்சி எடுத்திருப்பது, பாலாற்று நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். இதை தடுத்து நிறுத்தக் கூடிய நடவடிக்கைகளை, தமிழக அரசு முன்னதாகவே மேற்கொண்டிருக்க வேண்டும். இது தமிழக அரசின் திறனற்ற ஆட்சியை வெளிப்படுத்துகிறது.
ஜி.கே.வாசன்,
த.மா.கா., தலைவர்

