/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூன்று மாதங்களில் 367 மாடுகள் பறிமுதல்...நடவடிக்கை!: திரும்ப ஒப்படைக்கப்படாது என எச்சரிக்கை
/
மூன்று மாதங்களில் 367 மாடுகள் பறிமுதல்...நடவடிக்கை!: திரும்ப ஒப்படைக்கப்படாது என எச்சரிக்கை
மூன்று மாதங்களில் 367 மாடுகள் பறிமுதல்...நடவடிக்கை!: திரும்ப ஒப்படைக்கப்படாது என எச்சரிக்கை
மூன்று மாதங்களில் 367 மாடுகள் பறிமுதல்...நடவடிக்கை!: திரும்ப ஒப்படைக்கப்படாது என எச்சரிக்கை
ADDED : நவ 23, 2024 12:40 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக, மூன்று மாதங்களில் மட்டும் 367 மாடுகளை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன. இதன் காரணமாக, சாலையில் திரியும் மாடுகள் பெருமளவில் குறைந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றாக, சாலையில் திரியும் மாடுகள் உள்ளன.
மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்து விட்டு, அவை சாலையில் திரிந்தும், ஓய்வெடுத்தும் வருவதால், காஞ்புரத்தில் அதிகளவிலான விபத்துகள் நடந்துள்ளன.
மேலும், சாலையில் திரியும் மாடுகள் திடீரென மிரண்டு, ஆக்ரோஷமாக பலரையும் முட்டியுள்ளது. இதனால், பலர் காயமடைந்து உள்ளனர்.
மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்டம் முழுதும் கோரிக்கை வலுத்தன. இருப்பினும் மாடுகள் நெடுஞ்சாலைகளில் திரிவது குறையாமல் இருந்தது.
சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக பார்க்கப்படும் இந்த விவகாரத்தை, மாவட்ட சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.
மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள், இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க, கலெக்டர் கலைச்செல்வி தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.
இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு மாதங்களாகவே, சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள் பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைப்பதும், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆகஸ்டில் 181 மாடுகளும், செப்டம்பரில் 50 மாடுகளும், அக்டோபரில் 136 மாடுகள் என, மூன்று மாதங்களில் மட்டும், மொத்தம் 367 மாடுகளை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் எதிரொலியாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த மாடுகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மூன்று மாதங்களில், மாடுகளின் உரிமையாளர்களுக்கு, 1,62,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள், கடந்த சில மாதங்களாக எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக, மாவட்டத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும், காஞ்சிபுரம், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் போன்ற முக்கிய நகர வீதிகளிலும் மாடுகள் சுற்றித் திரிவது குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், மூன்று மாதங்களில் மட்டும், 150 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில், 107 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்திரமேரூர் பேரூராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி, உத்திரமேரூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில், எந்த மாடுகளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நிர்வாகம் தற்போது எடுத்துள்ள தீவிர நடவடிக்கையை தொடர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி கூறியதாவது:
மாதாந்திர சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில் முக்கிய பொருளாக, மாடுகள் பிடிப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. கலெக்டர் ஒவ்வொரு கூட்டத்திலும் அதிகாரிகளிடம் கடிந்து கொள்கிறார்.
சாலைகளில் சுற்றும் மாடுகளை பிடிக்கவும், அதிகபட்ச அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். மாதந்தோறும் கெடுபிடி காட்டுவதால், உள்ளாட்சி துறை அதிகாரிகள், மூன்று மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து, கோசாலைகளில் ஒப்படைக்கின்றனர்.
நோய்வாய்ப்பட்ட மாடுகள், சினையாக உள்ள மாடுகளை மட்டும் விடுத்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாடுகள் பிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.
மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்து விட்டால் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவற்றை திரும்ப வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

