/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வெளியில் நடமாடியோர் அவதி
/
காஞ்சியில் 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வெளியில் நடமாடியோர் அவதி
காஞ்சியில் 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வெளியில் நடமாடியோர் அவதி
காஞ்சியில் 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் வெளியில் நடமாடியோர் அவதி
ADDED : மே 02, 2024 01:06 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை மறுநாள் துவங்கினாலும், ஒரு வாரமாகவே காஞ்சிபுரத்தில் வெயில் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று, 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது. இது பாரன்ஹீட் அளவில், 109 டிகிரியாக பதிவானது.
சுட்டெரித்த வெயிலில் நடமாடியோர், உடலை பாதுகாக்கும் வகையில், குடை பிடித்தும், பெண்கள் துப்பட்டா, டவல் மற்றும் புடவையால் தலை முகத்தை மூடியும், ஆண்கள் தலையில் டவல், தொப்பி அணிந்தும் சென்றதைக் காண முடிந்தது.
மாலை 5:00 மணியை கடந்தும் காஞ்சிபுரம் நகரில் அனல்காற்று வீசியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், தலைசுமை, நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், போக்குவரத்து காவலர்கள், போஸ்ட்மேன்கள், கூரியர் ஊழியர்கள், வீடுகளுக்கு சிலிண்டர், வாட்டர் கேன் போடுவோர், உணவு டெலிவரி செய்வோர் என, வெயிலில் நடமாடியோர் மிகுந்த அவதிக்குஉள்ளாகினர்.
அதேபோல, வீடுகளில் மின்விசிறி ஓடினாலும், அனல்காற்றே வீசியதால், முதியோர், கர்ப்பிணியர், குழந்தைகள் அவதிக்கு உள்ளாகினர்.
வெயிலின் தாகத்தை தணிக்க நீர்மோர், குளிர்பானம், ஜூஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டத்தைக் காண முடிந்தது.
மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளுக்கும் நேற்று காஞ்சியில் கொளுத்திய வெயிலுக்கு பாதிப்புக்குள்ளாகின.
மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளும் நிழல்தரும் இடங்களை தேடி தஞ்சமடைந்தன.
அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே, வறுத்தெடுக்கும் வெயில், நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் துவங்கியவுடன், ஆதவனின் ஆட்டம் எப்படி இருக்குமோ என, காஞ்சிபுரம் வாசிகள் அஞ்சியுள்ளனர்.

