ADDED : மார் 02, 2024 03:07 AM
தொழிலாளர் துறை ஆய்வில்
33 நிறுவனம் மீது நடவடிக்கை
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள், கடந்த மாதம் பெட்ரோல் பங்க், ரேஷன் கடை, இறக்குமதி பொருள் விற்பனை செய்யப்படும் கடை, இதர கடைகள், நிறுவனங்கள் என, 67 இடங்களில் எடையளவு சட்ட ஆய்வு செய்ததில், 30 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
38 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில், பொட்டல பொருள் விதிக்கு மாறாக, 2 கடைகளில் செயல்பட்டது கண்டறியப்பட்டது. குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில், 17 ஆய்வில் ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்ச ஊதியம் வழங்காதது தெரியவந்தது.
மொத்தத்தில், 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உதவி ஆணையர் திருஞானசம்பந்தம்,
செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பாரியூர் கோவிலுக்கு
அலுவலர் பொறுப்பேற்பு
கோபி: கோபி அருகே பாரியூரில், பிரசித்த பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில், செயல் அலுவலராக, 2022 ஏப்ரலில் ரத்தினாம்பாள் பொறுப்பேற்றார். பழநி தண்டாயுதபாணி கோவில் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்
பட்டார்.
அவருக்கு பதிலாக திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அனிதா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார்.
பெருந்துறை மார்க்கெட்டில்
சுங்கம் வசூலிக்கும் பேரூராட்சி
பெருந்துறை: பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட, பெருந்துறை தினசரி மார்க்கெட் சுங்க வரி வசூல் உரிமம் தனி நபருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று முதல் பேரூராட்சி நிர்வாகமே வரி வசூல் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, மக்கள் ஒத்துழைப்பு வழங்க, நிர்வாகம் கேட்டுக்
கொண்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில்
மூன்றாம் சுற்று நீர் திறப்பு
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில், இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு கடந்த ஜன., 7ம் தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த பிப்.,17ல் இரண்டாம் சுற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் சுற்று தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில், 1,000 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இதுதவிர அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 700 கன அடி தண்ணீர், குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு, 43 கன அடி நீர் வந்தது. நீர்மட்டம், 69.66 அடி; நீர் இருப்பு, 10.8 டி.எம்.சி.,யாக இருந்தது.
எம்.எல்.ஏ., தொகுதி நிதியில்
வளர்ச்சிப்பணிகள் துவக்கம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 24-வது வார்டு ஆர்.கே.வி., நகரில், 10 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா பராமரிப்பு; 25-வது வார்டு வி.ஜி.பி., நகரில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டும் பணி; 26-வது வார்டு அழகரசன் நகரில், 27 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியும் நேற்று தொடங்கியது.
மேயர் நாகரத்தினம் பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மண்ட தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர்கள் ரவி, சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீடு புகுந்து திருட முயன்ற
வாலிபர் கோபியில் கைது
கோபி,: கோபி, கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 58, கூலி தொழிலாளி; இரு நாட்களுக்கும் முன் பட்டப்பகலில் வீட்டில் புகுந்த ஆசாமி திருட்டில் ஈடுபட்டார். குடும்பத்தார் சத்தமிடவே தப்பி ஓடிய ஆசாமியை, அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து, கோபி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருநெல்வேலியை சேர்ந்த சுந்தர், 27, என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

