/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மழை வந்தாலே மலை கிராமத்துக்கு துயரம்; உயிரை பணயம் வைத்து செல்லும் அபாயம்
/
மழை வந்தாலே மலை கிராமத்துக்கு துயரம்; உயிரை பணயம் வைத்து செல்லும் அபாயம்
மழை வந்தாலே மலை கிராமத்துக்கு துயரம்; உயிரை பணயம் வைத்து செல்லும் அபாயம்
மழை வந்தாலே மலை கிராமத்துக்கு துயரம்; உயிரை பணயம் வைத்து செல்லும் அபாயம்
UPDATED : மே 22, 2024 10:28 AM
ADDED : மே 22, 2024 03:54 AM

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலையில், ௫௦க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில், ௨,௦௦௦த்துக்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர்.
இந்த கிராமத்துக்கு செல்ல குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் என இரு அபாயகர இடங்களை கடந்து தான் செல்ல வேண்டும். குரும்பூர் பள்ளத்தில் இருந்து, ௮ கி.மீ.,யில் சக்கரை பள்ளம் உள்ளது.
இந்த இரண்டிலும் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால், பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதியும் தடைபட்டு, மாக்கம்பாளையம் மலை கிராமம் தனி தீவாக மாறும். வெள்ளம் வற்றினால் தான் இயல்பு நிலைக்கு மக்கள் வர முடியும்.

இரு பள்ளங்களின் குறுக்கே மேம்பாலம் கட்ட, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடியதன் விளைவாக, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணி துவங்கியது. ஆனால், மந்தமாக பணி நடப்பதால் இன்னும் முழு பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாக்கம்பாளையம், அரிகியம் வனப்பகுதிகளில் கடந்த வாரம் பலத்த மழை பெய்ததால், சக்கரை பள்ளத்தில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால் பள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் பஸ் நின்று விட்டது.
பயணியரும், மக்களும் பள்ளத்தை ௪ கி.மீ., துாரம் நடந்து கடந்து, அடர்ந்த வனப்பகுதி வழியே கிராமத்தை அடைந்தனர்.
இந்நிலையில் தொடர் மழையால் சக்கரை பள்ளத்தில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஸ் செல்ல முடியாத நிலையில், கயிறு கட்டி, ஆபத்தான முறையில் இடுப்பளவு வெள்ளத்தை பயணியர் கடந்து சென்றனர்.
மழை வந்தாலே இந்த நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க இரு பள்ளங்களிலும் நடக்கும், பால கட்டுமான பணியை விரைந்து முடித்தால் மட்டுமே, உயிரை பணயம் வைக்கும், இப்பகுதி மக்களின் துயரம் முடிவுக்கு வரும்.

