/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு சுலபம் சென்டம் எண்ணிக்கை உயரும்
/
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு சுலபம் சென்டம் எண்ணிக்கை உயரும்
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு சுலபம் சென்டம் எண்ணிக்கை உயரும்
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு சுலபம் சென்டம் எண்ணிக்கை உயரும்
ADDED : ஏப் 12, 2025 02:35 AM

திண்டுக்கல்:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் வினாக்கள் சுலபமாக கேட்கப்பட்டிருந்தன. 2 முதல் 7 மதிப்பெண் வினாக்கள் புத்தக கேள்விகளாகவும், முந்தைய பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களாக இருந்தன. இதனால் கடந்த ஆண்டுகளை விட இந்த முறை சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என திண்டுக்கல் மாணவர்கள் தெரிவித்தனர்.
* எளிதாக தேர்ச்சி பெற முடியும்
எம். மஹீரா, கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்தமிழ் நகர், திண்டுக்கல்: அறிவியல் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு நடந்தது. இதில் 1 மதிப்பெண் வினாக்கள் புத்தக குறிப்பில் இருந்தும், உட்பகுதியில் இருந்தும் சிறிது மாற்றம் செய்து கேட்கப்பட்டிருந்தன. 2 முதல் 7 மதிப்பெண் பிரிவில் முந்தைய ஆண்டுகள் நடந்த பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களும், புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து சில மாற்றம் செய்யப்பட்டு கேட்கப்பட்டிருந்தன. மாணவர்கள் எளிதாக சென்டம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக வேதியியல் பிரிவின் கணக்குகள் சற்று கடினமாக கேட்டிருந்தது. இந்த முறை சராசரியாக படிக்கும் மாணவர்கள் கூட 60 மதிப்பெண்கள் வரை சுலபமாக எடுக்க முடியும்.---
* சென்டம் எடுப்பது எளிது
வி. மகாராஜா, அச்யுதா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் : 1 மதிப்பெண் வினாக்கள் புத்தக கேள்விகளில் இருந்து சிலவற்றை மாற்றம் செய்து கேட்டிருந்ததால் சற்று குழப்பம் ஏற்பட்டது. 2 மதிப்பெண் பிரிவில் கணக்கு வினாக்கள் கேட்கப்பட்டது. 4 முதல் 7 மதிப்பெண்
பிரிவில் முந்தைய ஆண்டுகள் கேட்கப்பட்ட கேள்விகளும், புத்தக வினாக்களும் அதிகமாக வந்திருந்தது. ஆனால் கேள்விகளை புரிந்து படித்தவர்களுக்கு வேதியியல் கணக்குகள் எளிதாக இருந்திருக்கும். சராசரி மாணவர்கள் பொதுத்தேர்வில் 60 மதிப்பெண், செய்முறை தேர்வில் 20 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் மொத்தம் 80 மதிப்பெண்கள் எளிதாக பெற்று விடுவார்கள்.
அறிவியல் பொதுத் தேர்வு எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்ததால் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட இந்த முறை அதிகமாக இருக்கும்.
------
* சராசரி மாணவன் கூட நல்ல மதிப்பெண் வாங்க முடியும்
எஸ்.சிவசக்தி, பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி, கள்ளிமந்தையம் : 12 ஒரு மதிப்பெண் வினாக்களில் 2 மட்டும் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் எளிதாக தான் இருந்தது. 2, 4 மதிப்பெண் கட்டாய வினாக்கள் புக் பேக் பகுதியிலிருந்து இல்லாமல் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. 7 மதிப்பெண் வினாக்கள் புக் பேக் பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்ததால் மிகவும் எளிதாக இருந்தது. கட்டாய வினாக்கள் தவிர்த்து மற்ற வினாக்கள் எளிதுதான். பாடங்களை ஆழமாக புரிந்து படித்திருந்தால் சென்டம் வாங்கி விடலாம். மொத்தத்தில் சராசரியாக படிக்கும் மாணவன் 75 மதிப்பெண்களுக்கு 50 மதிப்பெண் எளிதாக வாங்கும் வகையில் வினாக்கள் இருந்தன.
---
* எதிர்பார்த்தபடி எளிதாக இருந்தது
மு.மதன பார்கவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.அய்யாபட்டி, கோபால்பட்டி: அறிவியல் பிடித்த சப்ஜெக்ட் என்பதால் நன்றாக படித்திருந்தேன். அதனால் வினாக்கள் எதிர்பார்த்தபடி எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண் பிரிவில் வந்த 2 கேள்விகள் புத்தக பாடத்திட்ட கேள்வியிலிருந்து வராமல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. இதை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் பாடத்திட்டத்தில் உள்ள கேள்வி பதில்களை மட்டும் படிக்காமல், பாடத்திற்குள்ளும் ஓரளவு படித்ததால் அந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடிந்தது. 2, 4, 7 மதிப்பெண் பிரிவில் அனைத்து வினாக்களுக்கும் முழுவதுமாக பதில் அளித்ததால் சென்டம் எடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
---
* எளிமையான வினாத்தாள்
ஆரோக்கியதாஸ், அறிவியல் ஆசிரியர், ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வத்தலக்குண்டு : ஒரு மதிப்பெண் பிரிவில் 12, இரு மதிப்பெண் 7, 4 மதிப்பெண் 7, ஏழு மதிப்பெண் 3 என கொண்ட வினாத்தாளில் இரு மதிப்பெண் கட்டாய வினா சுலபமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 4 மதிப்பெண் பிரிவில் கட்டாய வினாவும் நன்கு படித்தவர்களுக்கு சுலபமாக தான் உள்ளது. எதிர்பார்த்த கேள்விகள் தான் கேட்கப்பட்டிருந்தன. பின்தங்கிய மாணவர்கள் கூட தேர்வுக்கு பிறகு மகிழ்ச்சியாக நன்றாக தேர்வு எழுதியதாக கூறினர். மாணவர்கள் 50க்கு மேல் தான் மதிப்பெண் எடுப்பர். சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கும். மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு அறிவியல் வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது.

