ADDED : அக் 02, 2025 03:22 AM
திண்டுக்கல் : சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணி களுக்காக திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை என்பதால் இந்த ஆண்டு பூஜை விடுமுறையை கொண்டாட வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு படையெடுத்துள்ளனர். விடுமுறை முடிந்து மீண்டும் அவர்கள், தாங்கள் வேலை செய்யும் நகரங்களுக்கு திரும்பும்போது அதிக கூட்ட நெரிசல் ஏற்படும். இதை தவிர்க்கவும், சிரமமின்றி பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வரவும் அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மொத்தம் 45 சிறப்பு பஸ்கள் பயணிகள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டுள்ளது. இது தவிர விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் அக்.,5ல், தேனி, பழநியில் இருந்து தலா ஒரு பஸ்சும், திண்டுக்கல்லில் இருந்து 2 பஸ்களும் முன்பதிவின் அடிப்படையில் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகிறது. இதுதவிர, முன்பதிவில்லா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 5 பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
பண்டிகை காலத்தையொட்டி விடுமுறை எடுக்காமல் கண்டக்டர்கள், டிரைவர்கள் பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
