/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காடு போல் காட்சியளிக்கும் வீரசின்னம்பட்டி நெடுங்குளம்
/
காடு போல் காட்சியளிக்கும் வீரசின்னம்பட்டி நெடுங்குளம்
காடு போல் காட்சியளிக்கும் வீரசின்னம்பட்டி நெடுங்குளம்
காடு போல் காட்சியளிக்கும் வீரசின்னம்பட்டி நெடுங்குளம்
ADDED : மே 25, 2024 05:31 AM

சாணார்பட்டி, : வீரசின்னம்பட்டி நெடுங்குளத்தில் கருவேல் மரங்கள் ஆக்கிரமிப்பால் காடு போல் காட்சியளிப்பதோடு, நீரை தேக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
சாணார்பட்டி ஒன்றியம் வீரசின்னம்பட்டி ஊராட்சியில் உள்ளது நெடுங்குளம். 21.17 ஏக்கர் கொண்ட பெரிய குளம் ஆகும்.
இக்குளத்திற்கு சிறுமலைலிருந்து உருவாகி வரும் சந்தனவர்த்தினி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர்தான் குளத்தை நிறைக்கும்.
நெடுங்குளம் நிறைந்தால் அதனை சுற்றிய பல: நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் போர் வெல்கள், கிணறுகள் உள்ளிட்டவைகளிலும் நீர் பெருகும். சுற்று கிராமங்களின் குடிநீர் பிரச்னையும் இருக்காது.
ஆனால் தற்போது நெடுங்குளம் பல ஆண்டுகளாக போதுமான பராமரிப்பு இன்றி குளத்தின் பரப்பளவில் 90 சதவீதம் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.
தனி நபர்களும் குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். இதன்கரையில் இருந்து பார்த்தால் குளம் போல் தெரியாது அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது. கருவேல மரங்களை அகற்றி குளத்தை துார்வாரினால் மட்டும் குளம் நிறையும் நிலை உள்ளது.
நீரை உறிஞ்சு விடுகின்றன
தனபால், சமூக ஆர்வலர், வீரசின்னம்பட்டி: வீரசின்னம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நெடுங்குளம் தற்போது சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் காடு போல் காட்சி அளிக்கிறது.
குளத்தில் தேங்கும் தண்ணீரை சீமை கருவேலமரங்கள் உறிஞ்சு விடுகின்றன. போதுமான தண்ணீர் இருந்தும் தேக்கி வைக்க வழி இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களைக் கொண்டு குளத்தை சுத்தம் செய்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
பராமரிப்பே இல்லை
பிரபாகரன், விவசாயி, வீரசின்னம்பட்டி: சந்தனவர்த்தினி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரால் நெடுங்குளம் நிறைந்தால் வீரசின்னம்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.
தற்போது குளமே தெரியாதபடி கருவேலமரங்கள், செடிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ளன.
பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குளத்தை பராமரித்து தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

