/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருப்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுமா?
/
திருப்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுமா?
ADDED : ஏப் 05, 2024 04:55 AM
திருப்பூர்: நுாற்றாண்டு கடந்தாலும், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் இன்னும் நிறைவான வசதிகளைப் பெறாததால், பயணிகளுக்குத் துன்பம் தொடர்கிறது.
மத்திய அரசின் 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷன் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகள் தேவைக்கேற்ப உரிய ரயில் வசதிகள் இன்னும் குதிரைக்கொம்பாகத் தான் உள்ளது. சரக்குகள் கையாள்வதற்கும் போதுமான வசதிகள் தேவைப்படுகிறது. தற்காலிக நடைமேடை அகலத்தை மட்டும் பயணிகள் வசதிக்காக நீட்டிக்க, 'அம்ரூத் பாரத்' திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மொத்தம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்தாண்டு, இறுதியில் துவங்கிய 'அம்ரூத் பாரத்' திட்ட பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. விரிவுபடுத்தப்பட்ட டூவீலர், கார் பார்க்கிங், பயணிகள் ஓய்வறை, கேன்டீன், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட ரயில்கள் அடுத்தடுத்து வரும் போதும், பயணிகள் உடனடியாக வெளியேறிச் செல்வதற்கான நுழைவு வாயில் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. தற்போது இரண்டாக உள்ள நுழைவு வாயில், இனி, நான்காக மாற்றப்பட உள்ளது.
திருப்பூரில் பயணிகள் ரயில் நின்று செல்லும் வசதி ஏற்படுத்தும் முன்பாகவே, சரக்கு ரயில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 1930 முதல் ரயில் நின்று சென்று, தற்போது கூட்ஸ்ெஷட் பிளாட்பார்ம் தண்டவாளப்பகுதியில் சரிந்து விழும் நிலை உள்ளது. (எம்.பி.,க்களாக இருந்தவர், நேரில் வந்து பார்த்து இருந்தால் தெரிந்திருக்கும்). அதிக பாரத்துடன் வரும் சரக்கு ரயில்கள் நிற்கும் போது, சுமூகமான வேகத்தில் சரக்குகளை லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்க முடிவதில்லை.
இதுகுறித்து திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் நிர்வாகிகள் சங்க பொறுப்பாளரும், மாவட்ட லாரி உரிமையாளர் சங்க பொருளாளருமான மணி கூறியதாவது: வடமாநிலங்களில் இருந்து மாதம், 25 முதல், 30 சரக்கு ரயில்கள் வருகிறது. சோளம், மக்காசோளம், கோதுமை, கோழித்தீவனம், அரசின் வாணிப கழகத்தின் உணவு பொருட்கள், சோயாப்புண்ணாக்கு என தினமும், 45 ஆயிரம் முதல், 50 ஆயிரம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. கூட்ஸ்ெஷட்டில், 45 பெண் தொழிலாளர் உட்பட, 170 பேர் பணிபுரிகின்றனர்; சரக்கு ரயில் பிளாட்பார்ம், யார்டு சேதமடைந்துள்ளது. மண்ணாக, குழியாக உள்ளது. கான்கிரீட் தளம் அமைத்தால் சரக்கு ரயில், லாரிகள் நிறுத்த எளிதாக இருக்கும். இவ்வாறு மணி கூறினார்.
நிற்காத ரயில்கள்...
இல்லாத ரயில்கள்!
சேலம் ரயில்வே கோட்ட, பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் கூறியதாவது:
'அம்ரூத்' பாரத் திட்டத்தில், உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோவை - ஈரோடு வழியாக செல்லும் சில ரயில்கள் நிற்பதில்லை. இந்த ரயில்கள் நின்று சென்றால், பயணிகள் பயன்பெறுவதுடன், சரக்குகளை அனுப்பி வைக்கவும் வசதியாக இருக்கும். தற்காலிகமாக சிறப்பு ரயில்ள் நிறுத்தப்படுகிறது. இருப்பினும் நிற்காத ரயில்கள் நின்றால் வருவாய் மேம்படும். கோவை - ராமேஸ்வரம் ரயில் செவ்வாய் மட்டுமே இயங்குகிறது. இதை தினசரி இயக்க வேண்டும். மயிலாடுதுறையை போல், கோவை - மதுரை, கோவை - துாத்துக்குடி இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை - பிகானீர், வாரத்தின் இருமுறை இயக்க கேட்டுள்ளோம். சரக்குகளை நிறுத்தி ஏற்றி, அனுப்பி, தனி 'ரேக்' கேட்டு வருகிறோம். பஞ்சாப் மாநிலம், லுாதியானா, மிகப்பெரிய தொழில் நகரம், கோவை, திருப்பூரில் இருந்து இந்நகரத்தை இணைக்க தற்போது வரை சரக்கு ரயில் போக்குவரத்து கிடையாது. இது ஒரு பெரும் குறையாகவே உள்ளது. கூடுதல் ரயில் கேட்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

