ADDED : மார் 10, 2025 01:12 AM
சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி
தர்மபுரி:தர்மபுரி டவுன், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில், பீஷ்ம ஏகாதசி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி, சூடிக்கொடுத்த சுடர்கொடியாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலையில், திருவீதி உலா மற்றும் மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை அழைப்பு நடந்தது. நேற்று பீஷ்ம ஏகாதசியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. பின், மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்க கவச அலங்கார சேவையை தொடர்ந்து, திருப்பள்ளி எழுச்சி பாராயணத்துடன் காலை முதல் மாலை வரை, சுவாமிக்கு குங்குமார்ச்சனை நடந்தது.
தொடர்ந்து, கணபதி, அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் நவகோள்கள் பூஜை, பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு திருபாவாட சேவை நடந்தன. இந்த வழிபாட்டின் போது, இனிப்பு மற்றும் பலகாரங்களை கொண்டு, அன்னத்தால் நடந்த அலங்கார சேவையையொட்டி, சுவாமிக்கு உபகார பூஜை மற்றும் மஹாதீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், ராம நவமி விழா குழுவினர் செய்திருந்தனர்.
