ADDED : ஜன 31, 2025 01:13 AM
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகம் முன், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சர்க்கரை ஆலை உழவர் பேரியக்க தலைவர் சத்தியராஜ் வரவேற்றார். உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் ஆலயமணி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஆலை கழிவு நீரால் நிலத்தடி நீர்மட்டம் மாசு அடைந்ததால், விவசாய பயிர்களின் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் தேங்கி மண் வளம், கிணற்று நீர் மாசடைந்துள்ளது.
இதை குடிக்கும் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் நோய்வாய் பட்டு இறக்கும் நிலையுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆலையில் நிரந்தர வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். கடந்தாண்டு, 1,700 டன் தோகை கழிவு கழித்த, ஒரு கோடி ரூபாயை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
தீபாவளிக்கு விவசாயி களுக்கு வழங்கபடும் சர்க்கரையை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பா.ம.க., நிர்வாகிகள் அரசாங்கம், அல்லிமுத்து, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
