/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
138 அரசு பள்ளிகளுக்கு 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் விரிவு
/
138 அரசு பள்ளிகளுக்கு 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் விரிவு
138 அரசு பள்ளிகளுக்கு 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் விரிவு
138 அரசு பள்ளிகளுக்கு 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் விரிவு
ADDED : டிச 11, 2025 05:06 AM
கோவை: கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில், 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் மேலும் 138 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின், தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த, பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில், அடிப்படை கணினி அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக, மாவட்டத்தில் கணினி ஆய்வக வசதிகள் கொண்ட பள்ளிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள, 85 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிரத்யேக பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன.
223 பள்ளிகளில்... இத்திட்டம் தற்போது, மாவட்டம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 232 அரசு நடுநிலை, 83 உயர்நிலைப்பள்ளிகளில், தற்போது 223 பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
கோவை நகரம் 20, சர்க்கார் சாமக்குளம் 18, பேரூர் 17, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி (வடக்கு மற்றும் தெற்கு) தலா 10 பள்ளிகள் என 15 ஒன்றியங்களிலும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தொடங்கப்பட்ட, 85 பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. விரிவுபடுத்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களுக்கு அடிப்படை கணினி திறன்களைக் கற்றுத்தர வாரம் இரு பாடவேளைகள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தடையற்ற இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. அச்சு புத்தகங்களுக்கு பதிலாக, ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் புத்தகங்கள், 'சாப்ட் காப்பி' வடிவில் வழங்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தனர்.

