ADDED : அக் 03, 2025 09:06 PM

வால்பாறை; வால்பாறை அண்ணாதிடலை விரிவுபடுத்த நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில் அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி மற்றும் கல்லுாரி, வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. நகராட்சியில், 21 வார்டுகள் இருந்தாலும் வால்பாறை நகரில் தான் அதிகளவில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், நகராட்சிக்கு சொந்தமான அண்ணாதிடலில் கோவில் விழா, அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆனால், இந்த திடல் கடந்த, 51 ஆண்டுகளாக விரிவுபடுத்தாமல் பழுதடைந்த நிலையில் இருப்பதால், திடலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக, அண்ணாத்திடல் காட்சிப்பொருளாகவும், டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவருகிறது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், கட்சியினரும், கோவில் விழா நிகழ்ச்சிகளுக்கும் திடலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது,'வால்பாறை நகரில் அமைந்துள்ள அண்ணாதிடலை இடித்து, கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய ஸ்டேடியம் அமைக்கப்படும். இதற்காக, தமிழக அரசு, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.
